பிப்ரவரி 5-ந் தேதி தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம்: 22 வேதிகைகள்-110 குண்டங்களுடன் யாகசாலை அமைக்கும் பணி


பிப்ரவரி 5-ந் தேதி தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம்: 22 வேதிகைகள்-110 குண்டங்களுடன் யாகசாலை அமைக்கும் பணி
x
தினத்தந்தி 13 Dec 2019 10:19 PM GMT (Updated: 13 Dec 2019 10:19 PM GMT)

பிப்ரவரி 5-ந் தேதி தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி 22 வேதிகைகள்-110 குண்டங்களுடன் யாகசாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர்,

உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டி தமிழகத்திற்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்து இருப்பவர் மாமன்னன் ராஜராஜ சோழன். இந்த கோவிலின் கட்டிடக்கலை மற்றும் கலையம்சம் காரணமாக அதனை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. உலகில் உள்ள சிவாலயங்களுக்கு மகுடமாக தஞ்சை பெரிய கோவில் திகழ்கிறது.

இந்த கோவில் கும்பாபி ஷேகம் அடுத்த ஆண்டு(2020) பிப்ரவரி மாதம் 5-ந் தேதி நடக்கிறது. இதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகின்றன. கோவில் முழுவதும் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. விநாயகர் சன்னதி கோபுரத்தில் சுத்தப்படுத்தப்பட்டு, சிதிலமடைந்த சிற்பங்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் முருகன் சன்னதி, பெரியநாயகி அம்மன் சன்னதி ஆகியவற்றில் உள்ள கோபுரங்களில் சிதிலமடைந்த சிற்பங்களை சீரமைக்க கோபுரங்கள் துணிகளை கொண்டு மறைக்கப்பட்டுள்ளன. கும்பாபிஷேகத்திற்காக கோவில் அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்க வளாகத்தில் யாகசாலை பந்தல் 178 அடி நீளமும், 108 அடி அகலத்தில் அமைக்கப்பட உள்ளது. இதில் 110 குண்டங்களும், 22 வேதிகைகளும் அமைக்கப் படுகிறது. இதற்காக பந்தல்தொழிலாளர்கள் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.


Next Story