வளர்ப்பு தந்தையால் கர்ப்பம்: வீட்டை விட்டு வெளியேறி மும்பை வந்த சிறுமி மீட்பு


வளர்ப்பு தந்தையால் கர்ப்பம்: வீட்டை விட்டு வெளியேறி மும்பை வந்த சிறுமி மீட்பு
x
தினத்தந்தி 13 Dec 2019 10:28 PM GMT (Updated: 13 Dec 2019 10:28 PM GMT)

வளர்ப்பு தந்தையால் கர்ப்பம் அடைந்த 15 வயது சிறுமி வீட்டை விட்டு வெளியேறி மும்பை தப்பி வந்தார். அந்த சிறுமியை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

மும்பை,

மும்பை சென்டிரல் ரெயில் நிலையத்தில் சம்பவத்தன்று அதிகாலை 2.30 மணி அளவில் 15 வயதுடைய சிறுமி ஒருவள் நடமாடிக்கொண்டிருந்தாள். இதனை கண்ட போலீசார் சிறுமியிடம் சென்று விசாரணை நடத்தினர். இதில், அந்த சிறுமி யூனியன் பிரதேசமான டாமன் பகுதியை சேர்ந்தவள் என்பதும், வீட்டை விட்டு ஓடிவந்ததும் தெரியவந்தது.

சிறுமி உடல்நலம் குன்றி காணப்பட்டதால் போலீசார் அவளை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர் நடத்திய பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் சிறுமியிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில், வளர்ப்பு தந்தை கடந்த 2 வருடமாக மிரட்டி கற்பழித்ததால் சிறுமி கர்ப்பம் அடைந்தது தெரியவந்தது. இதுபற்றி வெளியே யாரிடமாவது தெரிவித்தால் கொலை செய்து, உடலை தண்டவாளத்தில் வீசி விடுவதாகவும் அவர் மிரட்டி உள்ளார்.

இதனால் பயந்துபோன சிறுமி வீட்டை விட்டு வெளியேறி மும்பைக்கு ரெயில் ஏறி தப்பி வந்ததாக போலீசாரிடம் தெரிவித்தாள். இதையடுத்து சிறுமியை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து டாமன் போலீஸ் சூப்பிரண்டு விக்ரம்ஜித் சிங்கை தொடர்பு கொண்டு வளர்ப்பு தந்தை மீது நடவடிக்கை எடுக்கும் படி தெரிவித்தனர்.

இதன்பேரில் அங்குள்ள போலீசார், வழக்கு பதிவு செய்து, சிறுமியின் வளர்ப்பு தந்தையை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story