மர்ம காய்ச்சலால் 100-க்கும் மேற்பட்டவர்கள் அவதி - உடலில் கொப்பளங்கள் ஏற்படுவதால் மக்கள் பீதி


மர்ம காய்ச்சலால் 100-க்கும் மேற்பட்டவர்கள் அவதி - உடலில் கொப்பளங்கள் ஏற்படுவதால் மக்கள் பீதி
x
தினத்தந்தி 13 Dec 2019 10:53 PM GMT (Updated: 13 Dec 2019 10:53 PM GMT)

பல்லடம் அருகே மர்ம காய்ச்சலால் 100-க்கும் மேற்பட்டவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். உடலில் கொப்பளங்கள் ஏற்படுவதால் மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

மங்கலம்,

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே இச்சிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பெத்தாமூச்சிபாளையம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக இப்பகுதி கிராம மக்கள் மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டனர். பலர் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றனர். இருப்பினும் காய்ச்சல் சரிவர குணமாகவில்லை. இந்த நிலையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தனர். கை, கால்களில் வீக்கம், தொண்டை கரகரப்பு, நடக்க முடியாத அளவுக்கு மூட்டுவலி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றனர். காய்ச்சல் குணம் அடைந்தவர்களுக்கு சிறிது நாட்களில் அவர்களது உடல்களில் தீப்புண் போன்று கொப்பளங்கள் தோன்றின. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்து உள்ளனர். இது குறித்து பெத்தாமூச்சிபாளையம் பகுதி மக்கள் முகநூல், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மர்ம காய்ச்சலால் அவதிப்படுவதை வெளியிட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் சுகாதார ஆய்வாளர் லோகநாதன், கிராம நிர்வாக அதிகாரி சாமிநாதன் ஆகியோர் பெத்தாமூச்சிபாளையம் கிராமத்துக்கு சென்றனர். அங்கு மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களையும், காய்ச்சல் குணமடைந்தவுடன் சருமப்பிரச்சனை, கை கால் வீக்கம், நடக்க முடியாத அளவுக்கு மூட்டு வலியால் பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

இது குறித்து மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்கள் கூறியதாவது:-

பெத்தாமூச்சிபாளையம் பகுதியில் மர்ம காய்ச்சல் கொசு மூலம் ஏற்படுகிறதா? அல்லது கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகிப்பதால் ஏற்படுகிறதா?என தெரியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெத்தாமூச்சிபாளையம் பகுதியில் சுகாதார பணிகளையும், குடிநீர் தர பரிசோதனை செய்து சுத்தமான குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மர்ம காய்ச்சலை தடுக்க சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் இவ்வாறு அவர் கூறினார். பெத்தாமூச்சிபாளையம் பகுதியில் பரவி வரும் மர்ம காய்ச்சல் குறித்து சுகாதார ஆய்வாளர் லோகநாதன் கூறுகையில்" மர்ம காய்ச்சல் குறித்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களிடம் ஆய்வு செய்து வருகிறோம், பெத்தாமூச்சிபாளையம் பகுதியில் சுகாதார பணிகளை தீவிரப்படுத்தி உள்ளோம். இன்று( சனிக்கிழமை) காலை முதல் பெத்தாமூச்சிபாளையம் பகுதியில் இலவச மருத்துவ முகாம் நடக்கிறது" என்றார்.


Next Story