பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி: தமிழின ரெயில் பயணிகள் சங்கத்தினர் ரெயில்வே மந்திரியிடம் மனு


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி: தமிழின ரெயில் பயணிகள் சங்கத்தினர் ரெயில்வே மந்திரியிடம் மனு
x
தினத்தந்தி 13 Dec 2019 11:15 PM GMT (Updated: 13 Dec 2019 10:55 PM GMT)

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழின ரெயில் பயணிகள் சங்கத்தினர் ரெயில்வே மந்திரி பியூஸ் கோயலை சந்தித்து மனு அளித்தனர்.

மும்பை,

மும்பை தமிழின ரெயில் பயணிகள் நலச்சங்க தலைவர் அண்ணாமலை, பொதுச்செயலாளர் அப்பாதுரை, துணை தலைவர் ராஜா இளங்கோ, ஆலோசகர்கள் அசோக்குமார், லெட்சுமணன், முரளி ஆகியோர் கடந்த சில நாட்களாக டெல்லியில் முகாமிட்டு தமிழக மற்றும் மராட்டிய எம்.பி.க்கள் ராகுல் செவாலே, விநாயக் ராவத் மற்றும் தயாநிதி மாறன், ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன், தமிழச்சி தங்கபாண்டியன், வசந்தகுமார், ஞானதிரவியம், திருநாவுக்கரசு, தொல்திருமாவளவன், வேலுச்சாமி, சண்முக சுந்தரம் ஆகியோரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்துமாறு கடிதங்களை கொடுத்து வந்தனர்.

இந்தநிலையில் அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல், இணை மந்திரி சுரேஷ் அங்காடி ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனுக்களை கொடுத்து உள்ளனர். அவர்கள் ரெயில்வே மந்திரியிடம் வலியுறுத்தி உள்ள கோரிக்கைகள் பின் வருமாறு:-

மும்பை- சென்னை இடையே 2011-12 பட்ஜெட்டில் கூறியது போல 18 நேரத்தில் இயக்கப்படும் துரந்தோ எக்ஸ்பிரஸ் சேவை தொடங்கப்பட வேண்டும். 2009-ம் ஆண்டு பட்ஜெட்டில் கூறப்பட்ட குர்லா- நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை விரைவில் தொடங்க வேண்டும். திருப்பதி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், மதுரை, பரமகுடி வழியாக மும்பை- ராமேஸ்வரம் இடையே புதிய ரெயிலை இயக்க வேண்டும்.

மும்பை- நாகர்கோவில் ரெயிலை தினமும் இயக்க வேண்டும். மும்பையில் இருந்து தமிழகம் செல்லும் அனைத்து ரெயில்களும் தானேயில் நின்று செல்ல வேண்டும்.

மேற்கூறப்பட்ட கோரிக்கைகள் அந்த கடிதத்தில் இடம்பெற்றுள்ளன.

Next Story