உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் பிரிக்கும் பணி தீவிரம்


உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் பிரிக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 13 Dec 2019 11:12 PM GMT (Updated: 13 Dec 2019 11:12 PM GMT)

உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு அனுப்புவதற்காக பிரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27-ந் தேதி, 30-ந் தேதி ஆகிய நாட்களில் 2 கட்டமாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு 17 உறுப்பினர்கள், 170 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 265 ஊராட்சி மன்ற தலைவர்கள், 2 ஆயிரத்து 295 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஊரக பகுதியில் மொத்தம் 9 லட்சத்து 95 ஆயிரத்து 765 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தலை நடத்துவதற்கு 28 தேர்தல் நடத்தும் அதிகாரிகள், 363 உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும், மற்ற பதவிகளுக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் வேட்பு மனு தாக்கல் கடந்த 9-ந் தேதி தொடங்கியது.

இந்நிலையில் தேர்தல் நெருங்கிய நிலையில், அதை நடத்துவதற்கான பணிகளில் மாவட்ட நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. மாவட்டம் முழுவதும் வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முதலிபாளையம், மங்கலம், இடுவாய், தொரவலூர், ஈட்டிவீரம்பாளையம், காளிபாளையம், கணக்கம்பாளையம், பொங்குபாளையம், பெருமாநல்லூர், பட்டம்பாளையம், சொக்கனூர், மேற்குபதி, வள்ளிபுரம் ஆகிய 13 பஞ்சாயத்துகள் உள்ளன.

இதில் 114 வார்டு உறுப்பினர், 13 பஞ்சாயத்து தலைவர், 8 ஒன்றிய கவுன்சிலர், ஒரு மாவட்ட கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதற்காக 115 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே இந்த வாக்குச்சாவடிகளில் பயன்படுத்துவதற்கு தேவையான அழியாதை மை, பசை, நூல் உள்ளிட்ட பொருட்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுப்பிவைக்கப்பட்டது. இந்நிலையில் திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து இந்த பொருட்கள் அந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்புவதற்காக பிரிக்கும் பணி நேற்று தீவிரமாக நடைபெற்று, தயார் நிலையில் உள்ளது. இதில் ஏராளமான பணியாளர்கள் ஈடுபட்டனர்.


Next Story