வேலூரில் நர்ஸ் வீட்டில் ரூ.3 லட்சம் நகை, பணம் திருட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


வேலூரில் நர்ஸ் வீட்டில் ரூ.3 லட்சம் நகை, பணம் திருட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 14 Dec 2019 10:30 PM GMT (Updated: 14 Dec 2019 3:16 PM GMT)

வேலூரில் நர்ஸ் வீட்டின் பூட்டைஉடைத்து ரூ.3 லட்சம் நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

வேலூர், 

வேலூர் சத்துவாச்சாரி மாருதி நகரை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 40). சென்னை விமான நிலையத்தில் வேலைபார்த்து வருகிறார். இவருடைய மனைவி சுமதி (35). வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருந்துவமனையில் நர்சாக வேலைபார்க்கிறார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ரங்கநாதன் சென்னையில் வேலைபார்ப்பதால் வாரத்தில் ஒருநாள் வீட்டுக்கு வந்துசெல்வார்.

இந்த நிலையில் சுமதி நேற்றுமுன்தினம் இரவு பணிக்கு சென்றார். இதனால் தனது மகன், மகளை அங்குள்ள தனது தாய்வீட்டில் விட்டுவிட்டு, வீட்டை பூட்டிக்கொண்டு சென்றார். வேலைமுடிந்து நேற்றுகாலை வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததுகண்டு அதிர்ச்சியடைந்தார்.

வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. அதில் வைத்திருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரத்தை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்றுவிட்டனர். மேலும் பீரோவிலிருந்த பொருட்களும் கட்டில் மேல் வீசப்பட்டு சிதறிக்கிடந்தன. திருடப்பட்ட நகை, பணத்தின் மொத்த மதிப்பு ரூ,3 லட்சம் வரை இருக்கும் என தெரிகிறது.

இதுகுறித்து சத்துவாச்சாரி போலீஸ்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story