ரி‌ஷிவந்தியம் அருகே வனப்பகுதியில் அழுகிய நிலையில் பெண் பிணம் - கொலையா? போலீசார் விசாரணை


ரி‌ஷிவந்தியம் அருகே வனப்பகுதியில் அழுகிய நிலையில் பெண் பிணம் - கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 14 Dec 2019 10:45 PM GMT (Updated: 14 Dec 2019 5:33 PM GMT)

ரி‌ஷிவந்தியம் அருகே உள்ள வனப்பகுதியில் அழுகிய நிலையில் பெண் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ரி‌ஷிவந்தியம், 

ரி‌ஷிவந்தியம் அருகே உள்ள அத்தியூரில் வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் உள்ள காட்டு முனியப்பன் கோவில் அருகில் இருந்து நேற்று கடும் துர்நாற்றம் வீசியது. இதனால் அவதிப்பட்ட அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் பகண்டை கூட்டுரோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

அப்போது வனப்பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதையடுத்து போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் பிணமாக கிடந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருவண்ணாமலை மாவட்டம் நாச்சியாநந்தல் கிராமத்தை சேர்ந்த பெருமாள் மனைவி அஞ்சலை என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் அஞ்சலைக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி விட்டது. பெருமாள் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

அதன் பிறகு அஞ்சலை ரி‌ஷிவந்தியம் அருகே பெரியகொள்ளியூரில் உள்ள தனது தம்பி வீட்டிலும், தனது மகள்களின் வீடுகளிலும் சென்று தங்குவது வழக்கம். கடந்த 7-ந் தேதி பெரிய கொள்ளியூருக்கு வந்து விட்டு மீண்டும் வீட்டுக்கு செல்வதாக கூறிச்சென்றவர், அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

அவரது மகள்களும், மகனும் அஞ்சலை பெரியகொள்ளியூரில் இருப்பதாகவும், அவருடைய தம்பி அஞ்சலை சொந்த ஊருக்கு சென்று விட்டதாகவும் நினைத்திருந்தனர். இந்நிலையில் தான் அஞ்சலை வனப்பகுதியில் பிணமாக கிடந்தது தெரியவந்தது. இதனால் அவர் இறந்து ஒரு வாரத்துக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஞ்சலையை யாரேனும் கொலை செய்து வனப்பகுதியில் வீசிச்சென்றார்களா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வனப்பகுதியில் பெண் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story