ஊரக உள்ளாட்சி தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு கியாஸ் சிலிண்டர் சின்னம் - மாநில தலைவர் நெல்லை முபாரக் தகவல்


ஊரக உள்ளாட்சி தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு கியாஸ் சிலிண்டர் சின்னம் - மாநில தலைவர் நெல்லை முபாரக் தகவல்
x
தினத்தந்தி 14 Dec 2019 11:00 PM GMT (Updated: 14 Dec 2019 7:31 PM GMT)

ஊரக உள்ளாட்சி தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு கியாஸ் சிலிண்டர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அந்த கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறினார். நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நெல்லை, 

பாபர் மசூதி வழக்கில் நீதி கிடைக்கும் வரை எஸ்.டி.பி.ஐ. கட்சி போராடும். பாபர் மசூதி தீர்ப்பை மறுசீராய்வு செய்ய எஸ்.டி.பி.ஐ. கட்சி உள்பட 18 தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த மனுக்கள் குறுகிய காலத்துக்குள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த பிரச்சினையில் சட்டரீதியாக எஸ்.டி.பி.ஐ. கட்சி தொடர்ந்து போராடும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்து, அந்த இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும். பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். இதை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பும் நிகழ்ச்சி 3 நாட்கள் நடைபெற்று வருகிறது.

இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை தகர்த்தெறியும் வகையில் குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதில் இலங்கையில் இருந்து வந்த தமிழர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த சட்ட திருத்தத்தை கொண்டு வந்த பாரதீய ஜனதா மற்றும் ஆதரவு அளித்த அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த பிரச்சினையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் ஜெயலலிதாவின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டு உள்ளனர்.

தேசிய குடியுரிமை பதிவேடு, முத்தலாக் தடை சட்டம், கா‌‌ஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை திருத்த சட்டம் மூலம் இந்திய முஸ்லிம்களை உளவியல் தாக்குதலுக்கு ஆளாக்கி உள்ளனர்.

தமிழகத்தில் ஜனநாயக ரீதியாக நடைபெறும் போராட்டங்களை போலீசார் ஒடுக்குவதை ஏற்க முடியாது. டிசம்பர் 6-ந்தேதி சிறுபான்மை அமைப்பினரை அறவழியில் போராடக்கூட அனுமதிக்காமல் கைது செய்து வழக்கு போட்டுள்ளனர்.

தமிழகத்தில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு கியாஸ் சிலிண்டர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. எனவே, எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர்களுக்கு கியாஸ் சிலிண்டர் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். உள்ளாட்சி தேர்தலை ஒட்டுமொத்தமாக ஒரே கட்டமாக நடத்தி இருக்க வேண்டும். தற்போது ஊரக பகுதியில் நடத்தப்பட்டாலும், அடுத்தகட்டமாக நகர்பகுதி உள்ளாட்சி தேர்தலையும் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில செயலாளர் அகமது நவவி, நெல்லை மாவட்ட தலைவர் கனி, பொதுச்செயலாளர் பீர்மஸ்தான், துணைத்தலைவர் சாகுல் அமீது உஸ்மானி, மகளிர் அணி மும்தாஜ் ஆலிமா, பொருளாளர் களந்தை மீரா‌ஷா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Next Story