குழம்பில் இறைச்சி துண்டுகள் குறைவாக இருந்ததாக மனைவியை எரித்து கொன்றவருக்கு வலைவீச்சு


குழம்பில் இறைச்சி துண்டுகள் குறைவாக இருந்ததாக மனைவியை எரித்து கொன்றவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 14 Dec 2019 11:00 PM GMT (Updated: 14 Dec 2019 8:43 PM GMT)

குழம்பில் இறைச்சி துண்டுகள் குறைவாக இருந்ததாக மனைவியை எரித்து கொன்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மும்பை,

நவிமும்பை காமோதே பகுதியை சேர்ந்தவர் மனோகர் (வயது35). இவரது மனைவி பல்லவி (30). சம்பவத்தன்று இரவு மனோகர் மதுபோதையில் வீட்டுக்கு கோழி இறைச்சியை வாங்கி வந்தார். மேலும் அதை உடனடியாக சமைத்து தருமாறு மனைவியிடம் கூறினார். குழந்தைகளை கவனித்து கொண்டு இருந்த பல்லவி கோழி குழம்பு செய்ய சிறிது தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் மதுபோதையில் இருந்த மனோகர் கோழி குழம்பு செய்ய தாமதம் ஆனதாகவும், அவருக்கு வழங்கப்பட்ட குழம்பில் இறைச்சி துண்டுகள் குறைந்த அளவில் தான் இருந்ததாகவும் கூறி மனைவி பல்லவியிடம் தகராறில் ஈடுபட்டதுடன், அவரை தாக்கியதாக தெரிகிறது.

எனினும் ஆத்திரம் தீராத அவர் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து மனைவி மீது ஊற்றி தீ வைத்தார்.

பல்லவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரது உடலில் எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் அவர் சிகிச்சைக்காக சயான் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன்இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இறைச்சி துண்டுகளுக்காக மனைவியை எரித்து கொன்ற கணவரை தேடி வருகின்றனர்.

Next Story