தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4,710 வழக்குகளுக்கு தீர்வு


தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4,710 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 14 Dec 2019 11:09 PM GMT (Updated: 14 Dec 2019 11:09 PM GMT)

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4,710 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்ைட, சிவகாசி, சாத்தூர், ராஜபாளையத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதியுமான முத்துசாரதா தலைமை தாங்கினார். நீதிபதி சுமதி சாய்பிரியா, நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் மற்றும் மகளிர் நீதிமன்ற நீதிபதி பாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மாரியப்பன் வரவேற்றார். இதில் மாவட்ட நீதிபதி முத்துசாரதா பேசும்போது,

நீதி மன்றத்திற்கு அலைவதை தவிர்க்கவும், விரைவில் சமரசம் பேசி முடிக்கக்கூடி வழக்குகளை விரைந்து முடிக்க இருதரப்பினரும் விட்டு கொடுத்து போக வேண்டும். அவ்வாறு விட்டுக்்கொடுத்து போவதால் நன்மைகள் ஏற்படும். பிரிந்து வாழும் தம்பதிகள் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையுடன் வாழ முன்வர வேண்டும் என்றார்.

பின்னர் மோட்டார் வாகன விபத்து வழக்கு முடிக்கப்பட்டு இழப்பீட்டு தொகை ரூ.14 லட்சத்து 96 ஆயிரத்துக்கான காசோலையை மனுதாரருக்கு அவர் வழங்கினார். மேலும் மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சிவில், குற்ற வழக்குகள், வாகன விபத்து, காசோலை சம்பந்தப்பட்ட வழக்குகள், வங்கி வாராக்கடன்கள் மற்றும் சிறு வழக்குகள் உள்பட 9,716 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.

இதில் 4,710 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் நீதிமன்ற ஊழியர்கள், தன்னார்வ சட்டப்பணியாளர்கள், அரசுத்துறை அலுவலர்கள், வங்கி மேலாளர்கள், இன்சூரன்ஸ் நிறுவன அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story