உத்திரமேரூர் அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து சுடுகாட்டில் குடியேறும் போராட்டம்


உத்திரமேரூர் அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து சுடுகாட்டில் குடியேறும் போராட்டம்
x
தினத்தந்தி 14 Dec 2019 11:55 PM GMT (Updated: 14 Dec 2019 11:55 PM GMT)

உத்திரமேரூர் அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து சுடுகாட்டில் குடியேறும் போராட்டம் நடந்தது.

உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலூகாவிற்கு உள்பட்டது பல்வேரி கிராமம். இங்கு தனியார் ஒருவருக்கு கடந்த 4 மாதத்திற்கு முன்பு விதிகளை மீறி கல்குவாரி அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து கல்குவாரிக்கு அனுமதி வாங்கிய தனசேகரன் என்பவர் பூமிபூஜை போடுவதற்காக ஒரு சிலருடன் அந்த பகுதிக்கு சென்றார். அப்போதுதான் அந்த பகுதி பொதுமக்களுக்கே அங்கு கல்குவாரி அமையபோகிறது என்பது தெரியவந்தது.

ஏற்கனவே அந்த கிராமத்தில் 2 கல்குவாரிகள் இருக்கும் நிலையில் அந்த பகுதி பொதுமக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் மீண்டும் புதிய கல்குவாரியா? என்று எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி பொதுமக்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு போராட்டம் நடத்தினர்.

சுடுகாட்டில் குடியேறினர்

அதன் விளைவாக பூமிபூஜை போடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மாவட்ட கலெக்டர் மற்றும் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தியும் பொதுமக்கள் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று கல்குவாரி பணிகளை நிர்வாகிகள் தொடங்கியதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் அங்கு திரண்டு போராட்டம் நடத்தினர். அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் அங்குள்ள சுடுகாட்டில் குழந்தைகளுடன் குடியேறி போராட்டம் நடத்தினர். கல்குவாரியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story