பட்டிவீரன்பட்டி அருகே, வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் - உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க முடிவு


பட்டிவீரன்பட்டி அருகே, வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் - உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க முடிவு
x
தினத்தந்தி 15 Dec 2019 10:15 PM GMT (Updated: 15 Dec 2019 5:11 PM GMT)

பட்டிவீரன்பட்டி அருகே கண்மாய்க்கு தண்ணீர் வருவதை அடைத்ததால் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பட்டிவீரன்பட்டி,

பட்டிவீரன்பட்டி அருகே செங்கட்டான்பட்டி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் செங்கட்டான்பட்டி, சாலைப்புதூர், சுந்தரராஜபுரம் உள்ளிட்ட உட்கடை கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் சுமார் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த ஊருக்கு திண்டுக்கல்-வத்தலக்குண்டு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செங்கட்டான்பட்டி கண்மாய் குடிநீர் ஆதாரமாகவும், விவசாயத்திற்கு ஆதாரமாகவும் விளங்கி வருகிறது. இந்த கண்மாய் சுமார் 65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கடுமையான வறட்சி காரணமாக இந்த கண்மாய் கடந்த 5 ஆண்டுகளாக நிரம்பவில்லை. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தினர். இந்த பகுதியில் உள்ள தென்னந்தோப்புகள் அனைத்தும் அழிந்துவிட்டன.

இந்நிலையில் இந்த கண்மாய்க்கு சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக 5 ஆண்டுகளுக்கு பின்பு நீர் வரத்து ஏற்பட்டது. இதனால் இந்த பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர். அவர்களின் மகிழ்ச்சி சில நாட்களுக்கு தான் நீடித்தது. 40 சதவீத அளவு கண்மாய் நிறைந்த நிலையில் தண்ணீர் வரத்து நின்றுவிட்டது. இதற்கு இந்த கண்மாய்க்கு வரும் ராஜவாய்க்கால் தண்ணீர் அடைக்கப்பட்டதாக தெரிகி்றது.

குளத்திற்கு தண்ணீர் விடக்கோரி இந்த ஊரை சேர்ந்த பொதுமக்கள் வத்தலக்குண்டு வட்டார வளர்ச்சி அலுவலர், நிலக்கோட்டை தாசில்தார் ஆகியோரிடம் மனு கொடுத்தனர். கண்மாய்க்கு தண்ணீர் வராவிட்டால் தேர்தலை புறக்கணிப்பதாக இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும் செங்கட்டான்பட்டி, சாலைப்புதூர் கிராமங்களில் உள்ள வீடுகள், ெதருக்களில் உள்ளாட்சி தேர்தலை புறக் கணிக்கும் விதமாக கருப்பு கொடியை ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தகவலறிந்த நிலக் ேகாட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகுமார் தலைமையில் போலீசார் அங்கு பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், செங்கட்டான்பட்டி கண்மாய்க்கு சுமார் 5 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது தண்ணீர் வரத்து இருந்தது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நீர் வந்து கொண்டிருந்த நிலையில் ராஜவாய்க்காலில் மண்மூட்டைகளை அடுக்கி வைத்து கண்மாய்க்கு வரும் தண்ணீரை அடைத்துள்ளனர். இதுசம்பந்தமாக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டால் முறையான பதில் இல்லை. இந்த கண்மாய் நிறைந்தால் தான் ஒரு வருடத்திற்கு இந்த கிராம பகுதியில் குடிநீர் பிரச்சினை வராது என்றனர்.

Next Story