உத்தனப்பள்ளி அருகே 3 குட்டிகளுடன் 77 காட்டு யானைகள் முகாம் பொதுமக்கள் அச்சம்


உத்தனப்பள்ளி அருகே 3 குட்டிகளுடன் 77 காட்டு யானைகள் முகாம் பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 15 Dec 2019 11:00 PM GMT (Updated: 15 Dec 2019 9:17 PM GMT)

உத்தனப்பள்ளி அருகே 3 குட்டிகளுடன் 77 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

ராயக்கோட்டை,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே சானமாவு காப்புக்காட்டில் 65 யானைகள் முகாமிட்டுள்ளன. அதேபோல பீர்ப்பள்ளி வனப்பகுதியில் 3 குட்டிகளுடன் 12 யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் அருகில் உள்ள 20 கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். இந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டிட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சானமாவு வனப்பகுதி ஓசூர்-ராயக்கோட்டை சாலையில் அமைந்தள்ளது. சாலையின் 2 புறமும் வனப்பகுதியாக உள்ளதால் யானைகள் இந்த வனப்பகுதியில் பல குழுக்களாக முகாமிட்டு அட்டகாசம் செய்து வருகின்றன.

எச்சரிக்கை

தற்போது ஓசூர்-ராயக்கோட்டை சாலையையொட்டி யானைகள் நடமாட்டம் உள்ளதால் வாகன ஓட்டிகள் மெதுவாக செல்லுமாறு வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். மேலும் இரவு நேரங்களில் பீர்ஜேப்பள்ளி, சானமாவு, பென்னிக்கல் உள்ளிட்ட கிராம பகுதிகளில் விவசாயிகள் விளைநிலங்களில் காவலுக்கு இருக்க வேண்டாம் என்றும், வீடுகளின் முன்பு விளக்குகளை எரிய விடுமாறும், யானைகளின் நடமாட்டம் இருந்தால் வனத்துறைக்கு தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டனர்.

Next Story