வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு கலெக்டர் மெகராஜ் பார்வையிட்டார்


வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு கலெக்டர் மெகராஜ் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 15 Dec 2019 10:30 PM GMT (Updated: 15 Dec 2019 10:18 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதை கலெக்டர் மெகராஜ் பார்வையிட்டார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பணியில் அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்கள், பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் உள்பட மொத்தம் 13 ஆயிரத்து 978 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரியிலும், கொல்லிமலை ஒன்றியத்திற்கு சேந்தமங்கலம் சரண்யா திருமண மண்டபத்திலும், மல்லசமுத்திரம் ஒன்றியத்திற்கு மகேந்திரா பொறியியல் கல்லூரியிலும், நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்கு மெட்டாலா லயோலா கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், பள்ளிபாளையம் ஒன்றியத்திற்கு ஜீவி மஹாலிலும், ராசிபுரம் ஒன்றியத்திற்கு ஸ்ரீ குமரவேல் திருமண மண்டபத்திலும், திருச்செங்கோடு ஒன்றியத்திற்கு கே.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியிலும் நேற்று நடைபெற்றது.

இதேபோல் வெண்ணந்தூர் ஒன்றியத்திற்கு செங்குந்தர் திருமண மண்டபத்திலும், எலச்சிபாளையம் ஒன்றியத்திற்கு விவேகானந்தா கல்லூரியிலும், எருமப்பட்டி ஒன்றியத்திற்கு அன்னை மாதம்மாள் ‌ஷீலா பொறியியல் கல்லூரியிலும், மோகனூர் ஒன்றியத்திற்கு பேட்டபாளையம் அண்ணா கலையரங்கத்திலும், பரமத்தி ஒன்றியத்திற்கு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், புதுச்சத்திரம் ஒன்றியத்திற்கு ஞானமணி கல்லூரியிலும், சேந்தமங்கலம் ஒன்றியத்திற்கு வசந்த மஹால் திருமண மண்டபத்திலும், நாமக்கல் ஒன்றியத்திற்கு கவிஞர் ராமலிங்கம் கல்லூரியிலும் நேற்று நடைபெற்றது.

கலெக்டர் பார்வையிட்டார்

இவற்றில் பள்ளிபாளையம் மற்றும் கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பை கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு, தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-

வாக்குச்சாவடி பணியில் உங்களுடன் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களின் பெயர் விவரங்களை தற்போது நடைபெறுகின்ற பயிற்சி வகுப்பின் போதே தெரிந்துகொண்டு உங்களுக்குள் ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் மதியத்திற்குள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குச்சாவடிக்கு சென்றடைய வேண்டும். வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் உள்ளே வரவும், வெளியே செல்லவும் தனித்தனி வழிகள் அமைத்து தர வேண்டும்.

வெளிப்படை தன்மை

தங்களுக்கு வழங்கப்பட்ட கையேட்டில் உள்ளபடி வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட உள்ள பொருட்களை மண்டல அலுவலர்கள் சரியான முறையில் வழங்கி உள்ளார்களா? என்று வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். வாக்குப்பதிவிற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் தேர்தலுக்கு முன்தினமே செய்து முடிப்பதுடன், வாக்குப்பதிவு நாளன்று காலை 6 மணிக்கு வாக்குச்சாவடியில் பணிக்கு தயாராக இருக்க வேண்டும். வாக்குச்சாவடி பணியில் ஈடுபடும் அலுவலர்கள் வெளிப்படை தன்மையுடனும், நடுநிலைமையுடனும் நடந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் செல்லப்பம்பட்டி அரசு மேலநிலைப்பள்ளியில், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டு வரும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story