பெரம்பலூர் மாவட்ட உள்ளாட்சி தேர்தல் பணிக்கு 5,260 அலுவலர்கள் நியமனம் அதிகாரி தகவல்


பெரம்பலூர் மாவட்ட உள்ளாட்சி தேர்தல் பணிக்கு 5,260 அலுவலர்கள் நியமனம் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 18 Dec 2019 11:00 PM GMT (Updated: 18 Dec 2019 2:41 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபட 5,260 அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று, மாவட்ட தேர்தல் பார்வையாளர் தெரிவித்தார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு பெரம்பலூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் அனில்மே‌‌ஷ்ராம் தலைமை தாங்கினார். கலெக்டர் சாந்தா முன்னிலை வகித்தார். அப்போது தேர்தல் பார்வையாளர் அனில்மே‌‌ஷ்ராம் பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பெரம்பலூர், வேப்பூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு முதற்கட்டமாக வருகிற 27-ந் தேதியும், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு 2-ம் கட்டமாக வருகிற 30-ந் தேதியும் வாக்குப்பதிவு நடக்கிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிட மொத்தம் 3,990 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

5,260 அலுவலர்கள் நியமனம்

உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் தேர்தலை நடத்திட ஒரு தேர்தல் நடத்தும் அலுவலரும், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தலை நடத்திட 4 தேர்தல் நடத்தும் அலுவலரும், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலை நடத்திட 4 தேர்தல் நடத்தும் அலுவலரும் என 9 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மண்டல அலுவலர்கள், தலைமை வாக்குப் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்குப் பதிவு அலுவலர்கள் என மொத்தம் 5,260 அலுவலர்கள் தேர்தல் பணிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பணிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அலுவலர்களுக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை சுமூகமாக நடக்கும் பொருட்டு தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள நடைமுறைகள் குறித்த பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்களும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக அறிந்துகொண்டு, சிறப்பான முறையில் தேர்தலை நடத்திட அனைத்து அலுவலர்களும், ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், திட்ட இயக்குனர் தெய்வநாயகி, மகளிர் திட்ட இயக்குனர் தேவநாதன் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story