தஞ்சை பெரியகோவிலில் பிப்ரவரி 5-ந்தேதி கும்பாபிஷேகம்: 50 மீட்டர் இடைவெளியில் பாதுகாப்புக்காக தடுப்புகட்டைகள் அமைக்கப்படுகிறது


தஞ்சை பெரியகோவிலில் பிப்ரவரி 5-ந்தேதி கும்பாபிஷேகம்: 50 மீட்டர் இடைவெளியில் பாதுகாப்புக்காக தடுப்புகட்டைகள் அமைக்கப்படுகிறது
x
தினத்தந்தி 18 Dec 2019 10:30 PM GMT (Updated: 18 Dec 2019 7:05 PM GMT)

தஞ்சை பெரியகோவிலில் பிப்ரவரி 5-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்காக பெரியகோவில் வளாகத்தில் 50 மீட்டர் நீள இடைவெளியில் தடுப்புகட்டைகள் பாதுகாப்புக்காக அமைக்கப்படுகின்றன. இதற்காக போலீசார் அளந்து குறியீடு செய்யும்பணியில் நேற்று ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலை மாமன்னன் ராஜராஜசோழன் கட்டினார். இந்த கோவில் கட்டப்பட்டு 1000 ஆண்டுகள் கடந்து விட்டது.

இந்த கோவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல் துறை பராமரிப்பில் இருந்து வருகிறது. இந்த கோவிலில் 1996-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின்னர் 23 ஆண்டுகளுக்குப்பிறகு அடுத்த ஆண்டு (2020) பிப்ரவரி மாதம் 5-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகின்றன.

யாகசாலை பூஜை

இதையொட்டி கடந்த 1 ஆண்டாக கோவிலில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. கோவிலில் உள்ள கோபுரங்கள் சுத்தப்படுத்தும் பணி, சிதிலமடைந்த சிற்பங்கள் சரிசெய்யும் பணி, புல்தரை சீரமைக்கும் பணி, தரைதளம் சீரமைக்கும் பணி, கோவில் சுற்றுச்சுவர் சுத்தப்படுத்தும் பணிகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதையொட்டி தஞ்சை பெரியகோவிலில் பாலாலயம் கடந்த 2-ந்தேதி நடைபெற்றது. கும்பாபிஷேகத்திற்காக கோவில் அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்க வளாகத்தில் யாகசாலை பூஜைக்காக பந்தல் 178 அடி நீளத்திலும், 108 அடி அகலத்திலும் அமைக்கப்பட உள்ளது. இதில் 110 குண்டங்களும், 22 வேதிகைகளும் அமைக்கப்படுகிறது. இதற்காக பெத்தண்ணன் கலையரங்கத்தில் தகரத்தினால் ஆன கொட்டகை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகின்றன.

தடுப்புகட்டைகள்

மேலும் கும்பாபிஷேகத்திற்காக வாகனங்கள் நிறுத்துமிடம், பொதுமக்கள் கோவிலுக்குள் செல்லும் பாதை, வெளியே வரும் பாதை போன்றவை குறித்து ஆய்வுசெய்யப்பட்டு வருகின்றன. கோவில் வளாகத்தில் பக்தர்கள் நின்று கும்பாபிஷேகத்தை பார்ப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக கோவில் வளாகத்தில் 50 மீட்டர் நீள இடைவெளியில் தடுப்புகட்டைகள் அமைக்கப்பட்டு அதற்குள் பக்தர்கள் சென்று வெளியே வரும் வகையில் அமைக்கப்படுகின்றன.

இது குறித்து போலீசார் நேற்று அளவீடு செய்தனர். அவர்கள் 50 மீட்டர் நீளத்தில் குறியீடுகளையும் செய்தனர். தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் தலைமையில் போலீசார் இதற்கான பணிகளில் ஈடுபட்டனர்.

Next Story