எரிந்த நிலையில் இளம்பெண் பிணம்: குடும்பத்தகராறில் கொன்று எரித்த கணவர் போலீசில் சரண்


எரிந்த நிலையில் இளம்பெண் பிணம்: குடும்பத்தகராறில் கொன்று எரித்த கணவர் போலீசில் சரண்
x
தினத்தந்தி 18 Dec 2019 10:15 PM GMT (Updated: 18 Dec 2019 7:11 PM GMT)

விராலிமலை அருகே எரிந்த நிலையில் இளம்பெண் பிணமாக கிடந்த சம்பவத்தில், குடும்பத்தகராறு காரணமாக அவரை கொலை செய்ததாக அவருடைய கணவர் விருதுநகர் போலீசில் சரண் அடைந்தார்.

விராலிமலை,

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் மேலபச்சகுடி பிரிவு சாலை அருகே ஏழுமலை என்பவரது தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் நேற்று முன்தினம் காலை 30 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் எரிந்த நிலையில் கிடந்தது.

இதைப்பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் விராலிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையிலான போலீசார் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

கொலை செய்து உடல் எரிப்பு

அப்போது, அந்த பெண்ணை கொன்று பெட்ரோல் ஊற்றி உடலை எரித்தது தெரியவந்தது. ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. அந்த பெண்ணின் காலில் மெட்டி அணிந்து இருந்ததால் அவர் திருமணமானவராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். இதைத்தொடர்ந்து, அந்த பெண் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பிவைத்தனர். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணமாக கிடந்த பெண் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்?, எதற்காக கொலை செய்யப்பட்டார் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

கணவர் போலீசில் சரண்

இந்தநிலையில் விருதுநகர் மாவட்டம் பாண்டியநகர் அருகே காந்திநகர் பகுதியை சேர்ந்த ராம்குமார் என்பவர் தனது மனைவி பானுரேகாவை விராலிமலை அருகே கொலை செய்து, உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டதாக பாண்டிய நகர் போலீசில் நேற்று இரவு சரண் அடைந் தார். போலீஸ் விசாரணையில், ராம்குமார், அவருடைய அக்காள் மகளான பானுரேகாவை திருமணம் செய்து கொண்டதும், திருமணம் ஆனது முதல் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததும் தெரியவந்தது.

இதனால் ஆத்திரத்தில் இருந்த ராம்குமார், தனது மனைவியை கொலை செய்ய திட்டமிட்டு, அவரை திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து வரும் வழியில் விராலிமலை அருகே உள்ள ஒரு தோட்டத்தில் வைத்து பானுரேகாவை கழுத்தை நெரித்து கொலை செய்து, மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலை பிடித்து ஊற்றி, அவருடைய உடலை எரித்துவிட்டு வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story