மேல்மருவத்தூரில் சத்திமாலை இருமுடி விழா - லட்சுமி பங்காரு அடிகளார் தொடங்கி வைத்தார்


மேல்மருவத்தூரில் சத்திமாலை இருமுடி விழா - லட்சுமி பங்காரு அடிகளார் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 18 Dec 2019 10:15 PM GMT (Updated: 18 Dec 2019 8:51 PM GMT)

மேல்மருவத்தூரில் சத்திமாலை இருமுடி விழாவை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தொடங்கி வைத்தார்.

மதுராந்தகம், 

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தைப்பூச ஜோதி விழாவுக்கு முன்பாக சக்திமாலை அணிந்து, சக்தி விரதம் இருந்து அம்மனுக்கு இருமுடி எடுத்து வந்து சுயம்பு அன்னைக்கு அபிஷேகம் செய்கின்றனர். பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி காணிக்கை செலுத்துவது வழக்கமாக உள்ளது.

நேற்று தொடங்கிய இந்த சக்தி மாலை இருமுடி விழா பிப்ரவரி மாதம் 7-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. விழாவை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தொடங்கி வைத்தார்.

காலை 6 மணிக்கு கருவறை மண்டபத்தில் இயற்கை வழிபாடு நடைபெற்றது.

இதனை தொடர்ந்து இருமுடி அபிஷேகத்தை லட்சுமி பங்காரு அடிகளார் தொடங்கி வைத்தார். 9 சிறுமிகளும், 9 தம்பதிகளும் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் அபிஷேகம் செய்தனர்.

விழாவுக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தகவல் நிலையங்கள், வாகனங்கள் நிறுத்துமிடம், முதலுதவி, ஆம்புலன்ஸ் வசதி, சுற்றுப்புற சுகாதாரம், தீயணைப்பு வாகன ஏற்பாடு முதலிய பல ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளன. 1,000-க்கும் மேற்பட்ட செவ்வாடை தொண்டர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபாட்டுடன் தொண்டு செய்து வருகிறார்கள்.

விழா முடியும் வரை தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது. இந்த ஆண்டும் பல லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெறும் என உணவுக்குழு பொறுப்பாளர் கூறினார்.

விழா ஏற்பாடுகளை இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் துணைத்தலைவர்கள் கோ.ப.செந்தில்குமார் மற்றும் ஸ்ரீதேவி ரமேஷ் பொறுப்பில் ஆன்மிக இயக்கத்தின் பல்வேறு குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Next Story