பள்ளி மாணவிகள் கூட்டத்தில் கார் புகுந்தது; 8 வயது சிறுமி பரிதாப சாவு மேலும் 6 பேர் படுகாயம்


பள்ளி மாணவிகள் கூட்டத்தில் கார் புகுந்தது; 8 வயது சிறுமி பரிதாப சாவு மேலும் 6 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 19 Dec 2019 11:15 PM GMT (Updated: 19 Dec 2019 8:37 PM GMT)

ராஜாக்கமங்கலம் அருகே பள்ளி மாணவிகள் கூட்டத்தில் கார் புகுந்தது. இதில் 8 வயது சிறுமி பரிதாபமாக இறந்தார். மேலும், 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

ராஜாக்கமங்கலம்,

குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே சரல் பகுதியில் புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளி உள்ளது. நேற்று மாைல இந்த பள்ளி முடிந்து மாணவ- மாணவிகள் கூட்டமாக ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டே மகிழ்ச்சியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று திடீரென நிலைதடுமாறி தாறுமாறாக ஓடியது. அப்போது சாலையோரம் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார், அங்குள்ள கடை மீது மோதியது. அப்படி இருந்தும் வேகம் குறையாமல் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த மாணவிகள் கூட்டத்தில் கார் புகுந்தது.

மாணவி சாவு

இதனால் மாணவிகள் அலறி அடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர்.இதில் மாணவிகள் சிலரது மீது கார் மோதியது. கார் மோதியதில் மாணவிகள் ஆங்காங்கே தூக்கி வீசப்பட்டனர்.

ஒரு மாணவி மட்டும் காரின் முன்பகுதியில் சிக்கி சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டார். அங்குள்ள ஒரு பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி கார் நின்றது. இதில் அந்த மாணவி சம்பவ இடத்திலேயே ரத்த ெவள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

மேலும் 6 பேர் காயம்

கார் மோதியதில் மேலும் 4 மாணவிகள் உள்பட 6 பேர் காயம் அடைந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் சினிமாவை போல் இந்த சம்பவம் நடந்து முடிந்தது. காயம் அடைந்த மாணவிகளின் அலறல் சத்தத்தால் அந்த பகுதி முழுவதும் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த வெள்ளிச்சந்தை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கார் மோதி பலியான மாணவி தீபிகா (வயது 8) என்பது தெரிய வந்தது. அவள் அந்த பள்ளிக்கூடத்தில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள்.

மேலும் காயம் அடைந்த நீத்து (9) 4-ம் வகுப்பும், நீத்துவின் தம்பி விஷ்ணு (8) 3-ம் வகுப்பும், சுஸ்மிதா (7) 2-ம் வகுப்பும் படித்து வந்தனர். இறந்த தீபிகாவின் அக்காள் தீபா (10) அதே பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். அவளும் காயம் அடைந்தார். மேலும் நீத்துவின் பாட்டி மேரியும் இந்த விபத்தில் காயம் அடைந்தார்.

மேலும் காரை ஓட்டி வந்த மணவிளையைச் சேர்ந்த அரசு ஓய்வு பெற்ற என்ஜினீயர் தமிழ்ச்செல்வன் (62) என்பவரும் காயம் அடைந்தார். சம்பவ இடத்தை குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ் சாஸ்திரி பார்வையிட்டார்.

காயம் அடைந்த சுஸ்மிதா, தமிழ்செல்வன் ஆகியோரை ராஜாக்கமங்கலம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் 4 பேரை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திரண்டனர்

விபத்து பற்றிய தகவல் அறிந்தவுடன் காயம் அடைந்த மாணவிகளின் பெற்றோர் மற்றும் ஆசிரிய- ஆசிரியைகள், அந்த பகுதி மக்கள் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் திரண்டனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

விபத்து குறித்து வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story