வாக்குச்சாவடி அலுவலர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் கலெக்டர் ரத்னா அறிவுரை


வாக்குச்சாவடி அலுவலர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் கலெக்டர் ரத்னா அறிவுரை
x
தினத்தந்தி 22 Dec 2019 10:45 PM GMT (Updated: 22 Dec 2019 2:38 PM GMT)

வாக்குச்சாவடி அலுவலர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று கலெக்டர் ரத்னா அறிவுரை வழங்கியுள்ளார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டம், செந்துறை அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சியை மாவட்ட கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், அரியலூர் மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 1,750 பதவியிடங்களுக்கு 5,483 பேர் போட்டியிடுகின்றனர். அரியலூர், செந்துறை, திருமானூர் ஆகிய ஒன்றியங்களுக்கு வருகிற 27-ந் தேதியும் ஜெயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம் ஆகிய ஒன்றியங்களுக்கு வருகிற 30-ந் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்காக 1,017 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பட்டியலின் குறியீட்டு படி

அவற்றில் மொத்தம் 8,315 பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளனர். வாக்குப்பதிவு அன்று வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் வாக்குச்சாவடியின் அனைத்து அலுவல்களுக்கும் பொறுப்பானவர் ஆவர். வாக்குப்பதிவு அலுவலர்-1, இவர் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு வழங்குதல் மற்றும் வாக்காளர் பட்டியலின் குறியீட்டு படி பராமரிக்க பொறுப்பானவர். வாக்குப்பதிவு அலுவலர்-1ஏ, இவர் இரு வார்டு வாக்குச்சாவடியில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு வழங்குதல் மற்றும் வாக்காளர் பட்டியலின் குறியீட்டு படி பராமரிக்க பொறுப்பானவர்.

வாக்குப்பதிவு அலுவலர்-2, இவர் வாக்களிக்க வரும் வாக்காளர்களின் இடது ஆள்காட்டி விரலில் அழியாத மையினை இடுபவர். வாக்குப்பதிவு அலுவலர்-3, இவர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு வழங்குதல் மற்றும் வாக்காளர் பட்டியலின் குறியீட்டு படி பராமரிக்க பொறுப்பானவர். வாக்குப்பதிவு அலுவலர்-4, இவர் ஊராட்சி ஒன்றிய வார்டு தேர்தலுக்கான வாக்குச்சீட்டு வழங்குதல் மற்றும் வாக்காளர் பட்டியலின் குறியீட்டு படி பராமரிக்க பொறுப்பானவர். வாக்குப்பதிவு அலுவலர்-5, இவர் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு வழங்குதல் மற்றும் வாக்காளர் பட்டியலின் குறியீட்டு படி பராமரிக்க பொறுப்பானவர்.

சிறப்பாக பணியாற்ற வேண்டும்

வாக்குப்பதிவு அலுவலர்-6, இவர் வாக்காளர் வாக்களிப்பதற்கு வசதியான அம்புகுறி ரப்பர் முத்திரையின் இரு புறங்களிலும் மை ஒற்றி கொடுத்தல் மற்றும் வாக்குகளை பதிவு செய்த பின்னர் வாக்குச்சீட்டுகளை வாக்குப்பெட்டிக்குள் போடப்படுவதை உறுதி செய்பவர். எனவே தற்போது நடைபெற்ற பயிற்சியின் மூலம் வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குப்பதிவு நாளன்று சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றார். அதனை தொடர்ந்து கலெக்டர் ரத்னா செந்துறை ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையமான செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி (பொறுப்பு) பாலாஜி, திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன் (ஊரக வளர்ச்சி முகமை) மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர், வருவாய்த்துறையினர் உடனிருந்தனர்.


Next Story