காங்கிரஸ் கூட்டணி கூட்டத்தில் முடிவு: புதுச்சேரியில் 27-ந்தேதி ‘பந்த்’ முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு


காங்கிரஸ் கூட்டணி கூட்டத்தில் முடிவு: புதுச்சேரியில் 27-ந்தேதி ‘பந்த்’ முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 22 Dec 2019 11:15 PM GMT (Updated: 22 Dec 2019 9:17 PM GMT)

குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வருகிற 27ந்தேதி (வெள்ளிக்கிழமை) புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி,

நாடாளுமன்ற மக்களவையில் கடும் எதிர்ப்பு களுக்கு மத்தியில் குடியுரிமை திருத்த சட்ட மசோதா கடந்த 9-ந் தேதி நள்ளிரவு நிறை வேறியது.

குடியுரிமை திருத்த சட்டம்

அதேபோல் மாநிலங்களவையிலும் கடும் எதிர்ப்பு மத்தியில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா கடந்த 11-ந் தேதி நிறைவேறியது. மாநிலங்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு 125 பேர் ஆதரவும், 105 பேர் எதிர்ப்பும் தெரிவித்தனர்.

மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நீடித்து வருகிறது.

ஆலோசனை கூட்டம்

இந்த நிலையில் புதுச்சேரி வைசியாள் வீதியில் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.

இதில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், கமலக்கண்ணன், வைத்திலிங்கம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அரசு கொறடா அனந்தராமன், தி.மு.க. அமைப்பாளர்கள் சிவா எம்.எல்.ஏ. (தெற்கு), எஸ்.பி. சிவக்குமார் (வடக்கு), இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சலீம், துணை செயலாளர் அபிஷேகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள், ம.தி.மு.க. மாநில அமைப்பாளர் கபிரியேல், விடுதலை சிறுத்தைகள் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் சாமிநாதன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

நாராயணசாமி பேட்டி

கூட்டம் முடிந்தவுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாட்டை காப்போம், ஜனநாயகத்தை காப்போம், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை காப்போம் என்று மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான அரசு நாட்டு மக்களை மதத்தின் பெயரால் பிளவுபடுத்தும் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம், பேரணி நடைபெற உள்ளது.

மோடி தலைமையிலான பாரதீய ஜனதா அரசால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையை தகர்த்திடும் வகையில் குடியுரிமை திருத்த சட்டம் எதிர்கட்சிகளின் எதிர்ப்பை மீறி நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் இதனுடன் தேசிய குடிமக்கள் பதிவேடு முறையை செயல்படுத்த போவதாகவும் அறிவித்துள்ளது. இது அரசியலமைப்பு சட்டத்தின் 14-வது ஷரத்தின் படி நாட்டு மக்களை மதம், ஜாதி, பாலினம், மொழி என்ற வகையில் பிரிக்க முடியாது. சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற அடிப்படை சட்டத்திற்கு எதிரானதாகும்.

மோடி, அமித்ஷா தங்களுடைய இந்துத்துவ கோட்பாட்டை நிலைநிறுத்த இந்த சட்டத்தை கொண்டு வந்து நாட்டில் கலவரத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த சட்டம் ஏற்புடையதல்ல என்று பல மாநிலங்கள், பல்வேறு சமூக அமைப்புகள், அரசியல் கட்சி தலைவர்கள், மதசார்பற்ற அணி தலைவர்கள் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் நாடே பற்றி எரிகிறது.

முழுஅடைப்பு போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்திய பிறகு பல மாநிலங்களில் போராட்டம் நடந்தது. அப்போது காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் பலர் உயிரிழந்துள்ளனர்.

எனவே உடனடியாக குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எந்தவித நிபந்தனையுமின்றி மோடி அரசு திரும்ப பெற வேண்டும். இதற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வருகிற 26-ந் தேதி வணிகர்கள், தொழிலாளர்கள, விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், மீனவர்கள், பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் தேசியக்கொடி ஏந்தி பிரமாண்ட பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பேரணி புதுவை ஏ.எப்.டி. திடலில் இருந்து புறப்பட்டு தலைமை தபால் நிலையம் வரை நடக்கிறது. அதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

வருகிற 27-ந் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழுஅடைப்பு போராட்டமும் நடக்கிறது. இதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story