தூத்துக்குடி பீச் ரோட்டில் விபத்து: காயம் அடைந்தவரை, கலெக்டர் மீட்டு தனது காரில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பினார்


தூத்துக்குடி பீச் ரோட்டில் விபத்து: காயம் அடைந்தவரை, கலெக்டர் மீட்டு தனது காரில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பினார்
x
தினத்தந்தி 24 Dec 2019 10:30 PM GMT (Updated: 24 Dec 2019 7:24 PM GMT)

தூத்துக்குடி பீச் ரோட்டில் நடந்த விபத்தில் காயம் அடைந்தவரை மீட்டு தனது காரில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி பீச் ரோட்டில் நடந்த விபத்தில் காயம் அடைந்தவரை மீட்டு தனது காரில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

விபத்து

தூத்துக்குடி கிருபை நகரை சேர்ந்தவர் மோகன்(வயது 24). இவர் நேற்று மாலையில் தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் உள்ள படகு குழாம் அருகே கடற்கரையோரத்தில் தனது மனைவியுடன் நின்று கொண்டு இருந்தாராம். பின்னர் அவர் அங்கிருந்து புறப்படுவதற்காக மோகன் மோட்டார் சைக்கிளை திருப்பினாராம். அப்போது துறைமுகத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோகன் பலத்த காயம் அடைந்தார்.

கலெக்டர் உதவி

அப்போது மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வீட்டுக்கு செல்வதற்காக காரில் அந்த வழியாக வந்தார். விபத்தில் மோகன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்த உடன், கலெக்டர் காரை நிறுத்தினார். தொடர்ந்து படுகாயத்துடன் கிடந்த மோகனை மீட்டு தனது காரிலேயே தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களையும் தொடர்பு கொண்டு உரிய சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினார்.

சிறிது நேரத்துக்கு பிறகு மாற்று கார் மூலம் கலெக்டர் சந்தீப் நந்தூரி வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், கலெக்டரின் மனிதாபிமானத்தை நெகிழ்ச்சியுடன் பாராட்டினர். அதே நேரத்தில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட மோகனை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அங்கு பெரும் சோகம் நிலவியது.

இது குறித்து தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story