மாமல்லபுரத்தில், மழையையும் பொருட்படுத்தாமல் குவிந்த சுற்றுலா பயணிகள்


மாமல்லபுரத்தில், மழையையும் பொருட்படுத்தாமல் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 24 Dec 2019 10:11 PM GMT (Updated: 24 Dec 2019 10:11 PM GMT)

தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை தொடங்கிய நிலையில், சுற்றுலா பயணிகள் மழையையும் பொருட்படுத்தாமல் மாமல்லபுரத்தில் குவிந்தனர்.

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் நேற்று ஒரு நாள் முழுவதும் இடைவிடாமல் மிதமான மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை பாதிக்கக்கூடும் என கருதப்பட்டது. தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை தொடங்கிய நிலையில் சுற்றுலா பயணிகள் மழையையும் பொருட்படுத்தாமல் மாமல்லபுரத்தில் குவிந்தனர்.

அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல், கடற்கரை கோவில் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து கொண்டிருந்தது. நேற்று மிதமான மழை பெய்ததால் மாமல்லபுரம் நாட்டிய விழா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக நாட்டிய விழா நிகழ்ச்சிகள் ரத்து அறிவிப்பு திரும்ப பெறப்பட்டு வழக்கம் போல் பரதநாட்டியம், கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. லேசானமழையையும் பொருட்படுத்தாமல் திறந்தவெளி மேடையில் பரத நாட்டிய கலைஞர்கள் பரதநாட்டியம் ஆடி சுற்றுலா பயணிகளை மகிழ்வித்தனர். அதேபோல் தப்பாட்ட கிராமிய கலைஞர்களும் தப்பாட்டம் ஆடி பல்வேறு சாகசங்களையும் நிகழ்த்தினர்.

மழையையும் பொருட்படுத்தாமல் நாட்டிய விழா மேடையில் பரதநாட்டியம், தப்பாட்டம் ஆடிய கலைஞர்களுக்கு மாமல்லபுரம் சுற்றுலாத்துறை அலுவலர் சக்திவேல் நினைவு பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.

Next Story