3–வது பயிற்சி நடைபெறும் இடங்களில் அஞ்சல் வாக்கு அளிக்க வாக்குசாவடி உதவி மையம் - கலெக்டர் தகவல்


3–வது பயிற்சி நடைபெறும் இடங்களில் அஞ்சல் வாக்கு அளிக்க வாக்குசாவடி உதவி மையம் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 25 Dec 2019 10:45 PM GMT (Updated: 25 Dec 2019 12:43 PM GMT)

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்களுக்கு 3–வது கட்ட பயிற்சி நடைபெறும் இடங்களில் அஞ்சல் வாக்கு அளிக்க வாக்குசாவடி உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு 27 மற்றும் 30–ந் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ள தேர்தல் பணிகளில் பல்வேறு அரசு துறையினை சார்ந்த அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள், காவல்துறையை சார்ந்தவர்கள் ஈடுபட உள்ளனர்.

இந்த தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து துறை சார்ந்த பணியாளர்களுக்கு அஞ்சல் வாக்குசீட்டுகள் அளிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து துறை சார்ந்த பணியாளர்களுக்கு இன்று (வியாழக்கிழமை) 3–வது கட்ட பயிற்சி நடைபெறும் இடங்கள் மற்றும் தேர்தல் பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் தங்களுக்கு அளிக்கப்பட்ட அஞ்சல் வாக்கு சீட்டுகளை அளிக்க வாக்குசாவடி உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் 3–வது கட்ட பயிற்சி நடைபெறும் ஒரு நாள் மட்டும் வாக்குசாவடி உதவி மையம் அமைக்கப்படும். தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் தங்களுக்கான வாக்குரிமை வேறு ஊராட்சி ஒன்றியத்தில் இருந்தாலும், தங்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குசாவடி உதவி மையத்திலேயே வாக்குகளை செலுத்தலாம்.

அதன் பின்னர் இந்த அஞ்சல் வாக்குசீட்டுகள் ஊராட்சி ஒன்றியம் வாரியாக பிரிக்கப்பட்டு தொடர்புடைய ஊராட்சி ஒனறிய அலுவலகத்திற்கு போதிய பாதுகாப்பு வசதியுடன் அனுப்பி வைக்கப்படும். எனவே, தேர்தல் பணிகளில் ஈடுபடும் அனைத்து பணியாளர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களுக்கு அளிக்கப்பட்ட அஞ்சல் வாக்குசீட்டுகளை வாக்குசாவடி உதவி மையங்களில் அளித்து பயன்பெற வேண்டும்.

இந்த தகவலை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கே.எஸ்.கந்தசாமி தெரிவித்து உள்ளார்.

Next Story