கச்சிராயப்பாளையம் அருகே, பிளஸ்-2 மாணவி வி‌‌ஷம் குடித்து சாவு - தற்கொலைக்கு தூண்டியதாக காதலன் கைது


கச்சிராயப்பாளையம் அருகே, பிளஸ்-2 மாணவி வி‌‌ஷம் குடித்து சாவு - தற்கொலைக்கு தூண்டியதாக காதலன் கைது
x
தினத்தந்தி 25 Dec 2019 10:30 PM GMT (Updated: 25 Dec 2019 5:19 PM GMT)

கச்சிராயப்பாளையம் அருகே பிளஸ்-2 மாணவி வி‌‌ஷம் குடித்து இறந்தார். மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய காதலனை போலீசார் கைது செய்தனர்.

கச்சிராயப்பாளையம், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அடுத்த கரடிசித்தூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகள் வெள்ளையம்மாள்(வயது 17). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவரும், மாத்தூர் கிராமத்தை சேர்ந்த ரஞ்சித் என்கிற சிவாவும்(21) கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, வெள்ளையம்மாளுடன், ரஞ்சித் பலமுறை உல்லாசம் அனுபவித்ததாக தெரிகிறது. இதில் மாணவி கர்ப்பமடைந்தார். பின்னர் அவர், ரஞ்சித்திடம் சென்று தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த வெள்ளையம்மாள், வீட்டில் இருந்த வி‌‌ஷத்தை எடுத்து குடித்து விட்டார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாணவியின் தந்தை முருகன் கச்சிராயப்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக ரஞ்சித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story