உள்ளாட்சி தேர்தல்: காஞ்சீபுரம் மாவட்ட மதுக்கடைகளை மூட வேண்டும் - கலெக்டர் உத்தரவு


உள்ளாட்சி தேர்தல்: காஞ்சீபுரம் மாவட்ட மதுக்கடைகளை மூட வேண்டும் - கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 25 Dec 2019 10:45 PM GMT (Updated: 25 Dec 2019 5:43 PM GMT)

உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம், 

திருவண்ணாமலை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி அந்த மாவட்டங்களுக்கு 5 கி.மீ. சுற்றளவில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சில மதுக்கடைகள் மற்றும் பார்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதையொட்டி, காஞ்சீபுரம் நகரில் அம்பேத்கர் நகர், கங்கா நகர் மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் 2 மதுக்கடைகள், மண்ணூர், குன்றத்தூர் மதுக்கடைகள் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. காஞ்சீபுரம் செவிலிமேடு மதுக்கடை 28-ந்தேதி மாலை 5 மணி முதல் 30-ந்தேதி மாலை 5 மணி வரை மூடியிருக்கும்.

குன்றத்தூர் தாலுகாவுக்கு உள்பட்ட மவுலிவாக்கம், மலையம்பாக்கம், அய்யப்பன்தாங்கல் போன்ற இடங்களில் உள்ள மதுக்கடைகளும், பார்களும் வாக்கு எண்ணிக்கை நாளான ஜனவரி மாதம் 2-ந் தேதி முழுவதுமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story