இன்று வாக்குப்பதிவு நடைபெறும் 3 ஊராட்சி ஒன்றியங்களில் 522 வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைப்பு


இன்று வாக்குப்பதிவு நடைபெறும் 3 ஊராட்சி ஒன்றியங்களில் 522 வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 26 Dec 2019 11:00 PM GMT (Updated: 26 Dec 2019 7:23 PM GMT)

இன்று (வெள்ளிக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறும் அரியலூர், திருமானூர், செந்துறை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 522 வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டது.

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் 12 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 113 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 201 கிராம ஊராட்சி தலைவர், 1,662 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவியிடங்களுக்கு 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் அரியலூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சி உறுப்பினர் பதவியிடங்களுக்கு 233 பேரும், கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களுக்கு 4 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு ஒருவரும் என மொத்தம் 238 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதனால் தற்போது அரியலூர் மாவட்டத்தில் 12 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 112 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 197 கிராம ஊராட்சி தலைவர், 1,429 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 1,750 பதவியிடங்களுக்கு 5,483 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். இத்தேர்தலில் மொத்தம் 5 லட்சத்து 36 ஆயிரத்து 976 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். முதற்கட்டமாக அரியலூர், செந்துறை, திருமானூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள மொத்தம் 522 வாக்குச்சாவடிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைப்பு

இந்த வாக்குச்சாவடி மையங்கள் தயார் நிலையில் உள்ளன. இதனால் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இருந்து அரியலூர் ஒன்றியத்திற்கு 168 வாக்குச்சாவடி மையங்களுக்கு 387 வாக்குப்பதிவு பெட்டிகளும், திருமானூர் ஒன்றியத்திற்கு 190 வாக்குச்சாவடி மையங்களுக்கு 449 வாக்குப்பதிவு பெட்டிகளும், செந்துறை ஒன்றியத்திற்கு 164 வாக்குச்சாவடி மையங்களுக்கு 381 வாக்குப்பதிவு பெட்டிகளும் மற்றும் 72 வகையான வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களும் போலீஸ் பாதுகாப்புடன் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டன. இந்தநிலையில் அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதை மாவட்ட கலெக்டர் ரத்னா பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். வாக்குப்பதிவு முடிந்த பின்பு அரியலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குகள் அடங்கிய வாக்குப்பெட்டிகளை மூடி சீல் வைக்கப்பட்டு, அரசினர் கலைக்கல்லூரியிலும், திருமானூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குப்பெட்டிகள் கீழப்பழுவூர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியிலும், செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குப்பெட்டிகள் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, வருகிற 2-ந்தேதி காலை 8 மணியளவில் வாக்குகள் எண்ணப்படவுள்ளன.

ஜெயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு 2-வது கட்டமாக வருகிற 30-ந் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான வேட்பாளர்களின் இறுதி கட்ட பிரசாரம் நாளையுடன் (சனிக்கிழமை) ஓய்கிறது.


Next Story