திருவள்ளூர் அருகே வாக்குச்சாவடி மாற்றப்பட்டதற்கு - பொதுமக்கள் எதிர்ப்பு


திருவள்ளூர் அருகே வாக்குச்சாவடி மாற்றப்பட்டதற்கு - பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 26 Dec 2019 11:00 PM GMT (Updated: 26 Dec 2019 7:44 PM GMT)

திருவள்ளூர் அருகே வாக்குச்சாவடி மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பூண்டி ஒன்றியத்திற்கு உள்பட்டது நாராயணபுரம் ஊராட்சி. இங்கு 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) திருவள்ளூர் மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்களில் முதல் கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக தேர்தல் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த நிலையில் நாராயணபுரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு இன்று வாக்களிப்பதற்காக அதே பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வழிவகை செய்யாமல் அதிகாரிகள் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மஞ்சாங்குப்பம் கிராமத்தில் உள்ள பள்ளியில் வாக்குச்சாவடி அமைத்துள்ளனர்.

இதை தொடர்ந்து அரசு அதிகாரிகள் நாராயணபுரம் பகுதிக்கு சென்று வாக்களிப்பதற்கான பூத் சிலிப்பை பொதுமக்களிடம் வினியோகித்து வந்தனர்.

இதை பார்த்த அந்த பகுதி மக்கள் நாராயணபுரம் பகுதியில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவு சென்று முதியோர், கர்ப்பிணிகள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க இயலாது எனவும், கடந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் நாராயணபுரம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில்தான் நாங்கள் வாக்களித்தோம்.

அவ்வாறு இருக்கும்போது தற்போது அதை மாற்றி மஞ்சாங்குப்பம் பகுதியில் வாக்குச்சாவடியை மாற்றியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் நாராயணபுரம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் முன்பு ஒன்று திரண்டு மீண்டும் நாராயணபுரம் பகுதியிலேயே வாக்குச்சாவடியை அமைக்க வேண்டும் என்று கையில் பதாகைகளை ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இல்லை எனில் யாரும் இந்த உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்காமல் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க உள்ளோம் என்று தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story