கரூர் உள்பட 4 ஒன்றியங்களில் இன்று முதல்கட்ட தேர்தல்: வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன


கரூர் உள்பட 4 ஒன்றியங்களில் இன்று முதல்கட்ட தேர்தல்: வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன
x
தினத்தந்தி 26 Dec 2019 11:00 PM GMT (Updated: 26 Dec 2019 7:47 PM GMT)

கரூர், தாந்தோணி உள்பட 4 ஒன்றியங்களில் இன்று முதல் கட்ட தேர்தலையொட்டி அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

கரூர்,

தமிழக மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் பேரில் கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், தாந்தோணி, அரவக்குறிச்சி, க.பரமத்தி ஆகிய 4 ஒன்றியங்களிலும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆகிய 4 பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணிவரை முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. கிரு‌‌ஷ்ணராயபுரம், குளித்தலை, கடவூர், தோகைமலை என மற்ற 4 ஒன்றியங்களிலும் வருகிற 30-ந்தேதி (திங்கட்கிழமை) 2-ம் கட்டமாக தேர்தல் நடக்கிறது. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதன் அடிப்படையில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 48-ம், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினருக்கு 425-ம், ஊராட்சி மன்ற தலைவருக்கு 513-ம், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினருக்கு 2,654-ம் என மொத்தம் 3,640 வேட்பாளர்கள் கரூர் மாவட்ட தேர்தல் களத்தில் இருக்கிறார்கள்.

1,252 ஊரக பதவிகளுக்கு...

ஏமூர், மணவாடி, காருடையாம்பாளையம், நெடுங்கூர், இரணியமங்கலம், கள்ளப்பள்ளி, காளையப்பட்டி ஆகிய 7 ஊராட்சிகளில் மட்டும் போட்டியின்றி ஊராட்சி மன்ற தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 422 கிராம ஊராட்சி மன்ற உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடவூரில் 4 ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு போட்டியிட ஆட்கள் இல்லாத சூழல் உள்ளதால் அங்கு தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால் மொத்தமுள்ள 1,685 ஊரக பதவிகளில், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் 12-ம், ஒன்றிய வார்டு உறுப்பினர் 115-ம், கிராம ஊராட்சி தலைவர் 150-ம், கிராம ஊராட்சி மன்ற உறுப்பினர் 975-ம் என மொத்தம் 1,252 பதவிகளுக்கு 2 கட்ட தேர்தல் நடக்கிறது.

மொத்தம் கரூர் உள்பட 8 ஒன்றியங்களிலும் சேர்த்து 2,60,079 ஆண் வாக்காளர்கள் 2,73,166 பெண் வாக்காளர்கள், 50 இதர வாக்காளர்கள் என மொத்தம் 5,33,295 வாக்காளர்கள் இருக்கின்றனர். இதில் அரவக்குறிச்சி ஒன்றியத்தில் 50,164-ம், கரூரில் 66,513-ம், க.பரமத்தியில் 69,151-ம், தாந்தோணியில் 69,299 வாக்காளர்களும் முதல் கட்ட தேர்தலில் இன்று வாக்களிக்க உள்ளனர்.

பதற்றமான வாக்குச்சாவடி விவரம்

ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் நடத்த 18 அலுவலர்களும், அவர்களுக்கு உதவியாக 222 அலுவலர்களும் பணியில் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களிலும் மொத்தம் 983 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் கரூர் ஒன்றியத்தில் 13-ம், தாந்தோணியில் 12-ம், அரவக்குறிச்சியில் 5-ம், க.பரமத்தியில் 33-ம் என மொத்தம் 63 வாக்குச்சாவடி மையங்களில் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவின் போது இங்கு கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிப்பது மற்றும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு நுண்பார்வையாளர்களும் பணியமர்த்தப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

வேனில் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன

இன்று நடைபெறவுள்ள தேர்தலில் கிராம பகுதியை சேர்ந்த ஒவ்வொருவரும் 4 வாக்குகளை செலுத்த வேண்டும். இதையொட்டி மஞ்சள், பச்சை, இளஞ்சிவப்பு, வெள்ளை ஆகிய நிறங்களில் வாக்குசீட்டுகள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. முதல் கட்ட தேர்தலையொட்டி வெண்ணைமலையில் உள்ள கரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்குப்பதிவுக்கு தேவையான பேனா, பென்சில், ரப்பர், மை பாட்டில், பசை, சிறிய கத்தி உள்ளிட்ட பொருட்கள் மற்றும் வாக்குசெலுத்தும் இடத்தினை மறைமுகமாக வைப்பதற்கான அட்டை, வேட்பாளர் பட்டியல், அலுவலர்களுக்கான தேர்தல் பணி அட்டை உள்பட முக்கிய ஆவணங்கள் ஆகியவை சாக்குபைகளில் கட்டப்பட்டு தனித்தனியாக தயார் நிலையில் இருந்தன.

பின்னர் ஒன்றிய தேர்தல் அதிகாரியும், வட்டார வளர்ச்சி அதிகாரியுமான பாலசந்திரன் உள்பட அதிகாரிகள் அதனை பார்வையிட்டு அனைத்து பொருட்களும் சரியான முறையில் உள்ளனவா? என சரிபார்த்தனர். பின்னர் மொபைல் பார்ட்டி வேன் வரவழைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்குபெட்டிகள், வாக்குப்பதிவுக்கான பொருட்கள் உள்ளிட்டவை அதில் ஏற்றப்பட்டு வாக்குசாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மொத்தம் 3,660 வாக்குப்பெட்டிகள் 2 கட்ட தேர்தலுக்கும் பயன் படுத்தப்பட உள்ளன.

பாதுகாப்புக்கு 900 போலீசார்

இதற்கிடையே ஒன்றிய அலுவலகத்திற்கு வருகை தந்த வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு, வாக்குப்பதிவின் போது என்னென்ன பணிகளை மேற்கொள்வது? பின்னர் முடிவில் மெழுகின் மூலம் சீல் வைத்து வாக்குப்பெட்டிகளை பாதுகாப்புடன் ஒப்படைப்பது வரையிலான பணிகள் பற்றி எடுத்துரைத்து வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பது, வாக்காளரின் ஆவணங்களை சரிபார்ப்பது, விரலில் மை வைப்பது, பின்னர் வாக்காளர்களை வாக்கு செலுத்த அனுமதிப்பது உள்ளிட்ட பணிகளை அவர்கள் பிரதானமாக பார்க்க இருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும். வாக்குச்சாவடிகளுக்கு பணிக்கு வந்த அலுவலர்கள், வாக்குப்பெட்டிகள் உள்ளிட்ட பொருட்களை பெற்று கொண்டு வாக்குப்பதிவு நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

வாக்குச்சாவடியிலேயே தங்கும் அந்த அலுவலர்கள், இன்று அதிகாலை முதலே தேர்தல் வாக்குப்பதிவு பணிகளை தொடங்கி மக்கள் வாக்குகளை செலுத்த வழிவகை செய்கின்றனர். தாந்தோணி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரி மனோகரன் தலைமையிலும், மற்ற ஒன்றியங்களில் அந்தந்த ஒன்றிய தேர்தல் அதிகாரிகள் தலைமையிலும் வாக்குப் பதிவு பொருட்கள் அந்தந்த வாக்குசாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கரூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் முதல் கட்ட தேர்தல் பாதுகாப்பு பணியில் 900 போலீசார் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள். மேலும் வாக்காளர்களுக்கு பணம், விலைமதிப்புடைய பொருட்கள் ஏதும் நடத்தை விதிகளை மீறி பட்டுவாடா செய்யப்படுகிறதா? விதிமீறி பிரசாரத்தில் யாரும் ஈடுபடுகின்றனரா? என பறக்கும் படை குழுவினர், தேர்தல் அதிகாரிகள் ஆகியோர் மாவட்ட தேர்தல் பார்வையாளர் வெங்கடாசலம் அறிவுறுத்தலின்பேரில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

அரவக்குறிச்சி

அரவக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள 20 ஊராட்சிகளுக்கும் ஊராட்சித்தலைவர், மொத்தம் 156 ஊராட்சி வார்டு உறுப்பினர், 11 ஒன்றியக்குழு உறுப்பினர், ஒரு மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆகிய பதவிகளுக்காக உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெற உள்ளது. அதற்காக அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அந்தந்த பகுதி வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பெட்டிகள் உள்ளிட்ட வாக்குச்சாவடி களுக்கு தேவையான பொருட்கள் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டது. ஒவ்வொரு வாகனத்திலும் வாக்குப்பெட்டிகள் மற்றும் தேர்தலுக்கு தேவையான பொருட்கள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டது. லாரிகளில் பொருட்களை ஏற்றும்போது தேர்தல் அலுவலர்கள் பட்டியல் சரிபார்த்து அனுப்பிவைத்தனர்.


Next Story