வாக்குப்பதிவு முடிந்து ஓட்டுப்பெட்டிக்கு சீல் வைக்கும்போது, வாக்குச்சாவடியை முற்றுகையிட்ட வேட்பாளர்கள்


வாக்குப்பதிவு முடிந்து ஓட்டுப்பெட்டிக்கு சீல் வைக்கும்போது, வாக்குச்சாவடியை முற்றுகையிட்ட வேட்பாளர்கள்
x
தினத்தந்தி 27 Dec 2019 10:45 PM GMT (Updated: 27 Dec 2019 6:18 PM GMT)

பொள்ளாச்சியில் வாக்குப்பதிவு முடிந்து ஓட்டுபெட்டிக்கு சீல் வைக்கும் போது உள்ளே அனுமதிக்க கோரி வாக்குச்சாவடியை வேட்பாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சி, 

பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, கிணத்துக்கடவு, மதுக்கரை, ஆனைமலை ஒன்றியங்களில் நேற்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. சில வாக்குச்சாவடிகளில் 5 மணி ஆகியும், வாக்காளர்கள் வரிசையில் நின்றனர். அவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்குப்பதிவு நடந்தது.

வாக்குப்பதிவு முழுமையாக முடிந்ததும், வாக்குச்சாவடியில் நுழைவு வாயில் கதவு பூட்டப்பட்டது. இந்த நிலையில் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பி.கே.டி. பள்ளி வாக்குச்சாவடியில் மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தது.

இதையடுத்து அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் முன்னிலையில் ஓட்டு பெட்டிக்கு சீல் வைக்கும் பணி நடைபெற்றது. அப்போது அங்கு வந்த வேட்பாளர்கள் ஓட்டு பெட்டிக்கு சீல் வைக்கும் போது பூத் ஏஜெண்டுகளுடன், வேட்பாளர்களை உள்ளே அனுமதிக்க கோரி வாக்குச்சாவடி மையத்திற்கு முன் திரண்டனர்.

இதையடுத்து அங்கு பணியில் இருந்த போலீசார் ஏஜெண்டுகளை தவிர வேறு யாரையும் உள்ளே அனுமதிக்க முடியாது என்றனர். இதனால் வேட்பாளர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து வாக்குச்சாவடியை வேட்பாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வேட்பாளர்கள் வழக்கமாக உள்ளாட்சி தேர்தலின் போது பூத் ஏஜெண்டுகளுடன், வேட்பாளர்கள் வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றனர்.

அதற்கு போலீசார் எந்த வாக்குச்சாவடியிலும் வேட்பாளர்கள் அனுமதிக்கபடவில்லை என்றனர். இதையடுத்து வேட்பாளர்கள் செல்போன் மூலம் வடக்கு ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலரை தொடர்பு கொண்டு பேசினர். அதன்பிறகு சமரசம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை வைத்திருந்த வேட்பாளர்கள் மட்டும் வாக்குச்சாவடி வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

வேட்பாளர்கள் செல்வதற்குள் அந்த வாக்குச்சாவடியில் அனைத்து ஓட்டுப்பெட்டிகளும் கவர் போட்டு மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. மேலும் சீல் வைக்கப்பட்ட பெட்டியை ஒரு வெள்ளை நிற துணியால் மூடி வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் கட்டி விட்டனர். வேட்பாளர்கள் முற்றுகை போராட்டம் காரணமாக பி.கே.டி. பள்ளி வாக்குச்சாவடி நேற்று மாலை பரபரப்பாக காணப்பட்டது. 

Next Story