மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்: ஓட்டு போட்டு விட்டு திரும்பிய தந்தை-மகன் பலி - வத்தலக்குண்டு அருகே பரிதாபம்


மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்: ஓட்டு போட்டு விட்டு திரும்பிய தந்தை-மகன் பலி - வத்தலக்குண்டு அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 27 Dec 2019 11:00 PM GMT (Updated: 27 Dec 2019 7:17 PM GMT)

வத்தலக்குண்டு அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் ஓட்டுபோட்டு விட்டு திரும்பிய தந்தை, மகன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார்கள்.

வத்தலக்குண்டு, 

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு கன்னிமார் கோவில் பகுதியை சேர்ந்தவர் தங்கப்பாண்டி (வயது 60). இவரது மகன் மோகன்பாண்டி (25). இவரது மனைவி ஜெயப்பிரியா. இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. தங்கப்பாண்டியும், ேமாகன்பாண்டியும் உப்பு வியாபாரம் செய்து வந்தனர். இவர்களது சொந்த ஊர் விராலிபட்டி அருகே உள்ள ராமநாயக்கன்பட்டி.

இந்தநிலையில் நேற்று வத்தலக்குண்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையொட்டி ஓட்டு போடுவதற்காக நேற்று காலை தங்கப்பாண்டியும், மோகன்பாண்டியும் மோட்டார் சைக்கிளில் தங்களது சொந்த ஊரான ராமநாயக்கன்பட்டிக்கு சென்றனர். அங்கு வரிசையில் நின்று ஓட்டுப்போட்ட தந்தையும், மகனும் மதியம் மீண்டும் மோட்டார் சைக்கிளில் வத்தலக்குண்டு நோக்கி திரும்பி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை மோகன்பாண்டி ஓட்டினார். தங்கப்பாண்டி பின்னால் அமர்ந்து வந்தார்.

பழைய வத்தலக்குண்டு பிரிவு என்ற இடத்தில் அவர்கள் வந்தபோது, எதிரே திண்டுக்கல்லில் இருந்து தேனி நோக்கி தனியார் பஸ் ஒன்று வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த பஸ், மோகன்பாண்டி, தங்கப்பாண்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் அந்த மோட்டார் சைக்கிள் அருகில் இருந்த தோட்டத்திற்குள் தூக்கிவீசப்பட்டது. அதில் வந்த தங்கப்பாண்டி பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார். படுகாயமடைந்து உயிருக்கு போராடிய மோகன்பாண்டியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மோகன்பாண்டியும் உயிரிழந்தார்.

ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டு திரும்பிய தந்தை-மகன் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த விபத்து குறித்து வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story