வாக்குச்சாவடியில் இருந்து ஓட்டுப்பெட்டியை தூக்கிச்சென்றவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது போலீசார் வலைவீச்சு


வாக்குச்சாவடியில் இருந்து ஓட்டுப்பெட்டியை தூக்கிச்சென்றவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 28 Dec 2019 10:15 PM GMT (Updated: 28 Dec 2019 6:56 PM GMT)

விராலிமலை அருகே வாக்குச்சாவடியில் இருந்து ஓட்டுப்பெட்டியை தூக்கிச்சென்றவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க. பிரமுகர் மற்றும் அவருடைய 2 மகன்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் வெம்மணி ஊராட்சிக்கு நேற்று முன்தினம் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இந்த ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு நரியபட்டி கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், தி.மு.க. பிரமுகருமான ராஜாவின் மனைவி மகாலட்சுமி, அதே ஊரை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் சுப்பிரமணி மனைவி ராஜாத்தி, வெம்மணியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் வேலாயுதம் மனைவி விஜயாம்பாள், பெரியமூலிப்பட்டியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் கருப்பையா மனைவி அஞ்சலை ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இதில் மகாலட்சுமிக்கு ஆதரவாக அஞ்சலை வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இதனால் ராஜாத்தி, விஜயாம்பாள், மகாலட்சுமி ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். இந்நிலையில் அ.தி.மு.க.வை சேர்ந்த கருப்பையா, தி.மு.க.வை சேர்ந்த மகாலெட்சுமிக்கு ஆதரவு தெரிவித்தது தொடர்பாக, அவருக்கும், சுப்பிரமணிக்கும் இடையே விரோதம் ஏற்பட்டுள்ளது.

தந்தை-மகன்கள்

இந்நிலையில் நேற்று முன்தினம் பெரியமூலிப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில் அங்கு உள்ளவர்கள், இந்த வாக்குச்சாவடியில் ராஜாத்திக்கு அதிக ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக பேசிக்கொண்டனர். இதனால் ஆவேசமடைந்த கருப்பையா, அங்கிருந்த ராஜாத்தியின் உறவினர் நரியபட்டியை சேர்ந்த தனபாலுவிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது தனபால், கருப்பையாவை தாக்கி உள்ளார். இதைப்பார்த்த கருப்பையாவின் மகன்கள் சரவணன் (30), அய்யப்பன் (27) மற்றும் அவர்களது ஆதரவாளர் துரையன் மகன் மூர்த்தி (23) ஆகியோர் சேர்ந்து தனபாலை தாக்க சென்றபோது, அவர் அங்கிருந்து தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் அங்கிருந்த ஓட்டுப்பெட்டியை கடத்தி செல்ல முடிவெடுத்து, கருப்பையா உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து வாக்குச்சாவடியின் கதவை உடைத்து உள்ளே புகுந்து உள்ளனர். இதையடுத்து திடீரென மூர்த்தி ஓட்டுப்பெட்டியை தூக்கிக்கொண்டு காட்டுப்பகுதிக்குள் ஓடியுள்ளார், என்பது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

3 பேருக்கு வலைவீச்சு

இந்த சம்பவம் குறித்து பெரியமூலிப்பட்டி வாக்குச்சாவடி அலுவலர் அன்பழகன் அளித்த புகாரின்பேரில், மூர்த்தி, சரவணன், அய்யப்பன், கருப்பையா ஆகிய 4 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் மண்டையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட மூர்த்தியை போலீசார் நேற்று கீரனூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கருப்பையா, சரவணன், அய்யப்பன் ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையே காட்டுப்பகுதியில் இருந்து கைப்பற்றிய ஓட்டுப்பெட்டியை விராலிமலையில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் அலுவலர்கள் அனுப்பி வைத்தனர்.

குண்டர் சட்டம் பாய்ந்தது

இந்நிலையில் கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேர்தல் விதிமீறலில் ஈடுபட்ட மூர்த்தியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் ஊரக உள்ளாட்சி தேர்தலை அமைதியாக நடத்தும் வகையில் நாளை (திங்கட்கிழமை) 2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவின்போதும், வருகிற 2-ந் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணும் நாளன்றும் தேர்தல் விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது, என்று தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த மூர்த்தியிடம், அவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை போலீசார் வழங்கினார்கள். பின்னர் அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story