திருக்கோவிலூர் அருகே, வாலிபர், தீக்குளித்து தற்கொலை - மதுகுடிக்க மனைவி பணம் கொடுக்காததால் விபரீத முடிவு


திருக்கோவிலூர் அருகே, வாலிபர், தீக்குளித்து தற்கொலை - மதுகுடிக்க மனைவி பணம் கொடுக்காததால் விபரீத முடிவு
x
தினத்தந்தி 28 Dec 2019 10:45 PM GMT (Updated: 28 Dec 2019 7:16 PM GMT)

திருக்கோவிலூர் அருகே மதுகுடிக்க மனைவி பணம் கொடுக்காததால் மனமுடைந்த வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே உள்ள ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால் மகன் செந்தமிழ்செல்வன் (வயது 31). இவருடைய மனைவி உமாமகேஸ்வரி. சம்பவத்தன்று செந்தமிழ்செல்வன் தனது மனைவியிடம் மது குடிகக்க பணம் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த செந்தமிழ்செல்வன் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தன் மீது ஊற்றி தீவைத்துக்கொண்டார்.

இதில் பலத்த தீக்காயமடைந்த அவர் வலியால் அலறித்துடித்தார். இவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து செந்தமிழ்செல்வனை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி செந்தமிழ்செல்வன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story