சங்கராபுரம் அருகே, ஏரியில் மூழ்கி அக்காள்-தங்கை பலி


சங்கராபுரம் அருகே, ஏரியில் மூழ்கி அக்காள்-தங்கை பலி
x
தினத்தந்தி 28 Dec 2019 11:15 PM GMT (Updated: 28 Dec 2019 8:01 PM GMT)

சங்கராபுரம் அருகே ஏரியில் மூழ்கி அக்காள்-தங்கை உயிரிழந்தனர். இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சங்கராபுரம், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மூக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார், விவசாயி. இவருடைய மனைவி லதா. இவர்களுக்கு ஆனந்த்(வயது 12) என்ற மகனும், அபிராமி(13), திவ்யா(10) ஆகிய 2 மகள்களும் இருந்தனர். இதில் அபிராமி தேவபாண்டலத்தில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பும், திவ்யா அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பும் படித்து வந்தனர். ஆனந்த் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால் 3 பேரும் வீட்டில் இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம், அபிராமியும், திவ்யாவும் மூக்கனூரில் உள்ள பெரிய ஏரியில் குளிக்க செல்வதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறி விட்டு சென்றனர். பின்னர் அவர்கள் ஏரியில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதனால் அவர்கள் நீரில் தத்தளித்தபடி காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று அபயக்குரல் எழுப்பினர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் குளித்து கொண்டிருந்தவர்கள் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் இருவரும் நீரில் மூழ்கிவிட்டனர். ஆனாலும் அங்கிருந்தவர்கள் தண்ணீருக்குள் குதித்து அபிராமியையும், திவ்யாவையும் மீட்டனர். தொடர்ந்து அவர்கள் அருகில் உள்ள புதுப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது காண்போரின் கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

இதற்கிடையே இதுபற்றி அறிந்த சங்கராபுரம் தாசில்தார்(பொறுப்பு) பாண்டியன், வருவாய் ஆய்வாளர் தேவதாஸ், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் இறந்த 2 சிறுமிகளின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குளிக்க சென்ற அக்காள்-தங்கை ஏரியில் மூழ்கி இறந்த சம்பவம் மூக்கனூர் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story