உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை 12 மையங்களில் நடைபெறும் - கலெக்டர் தகவல்


உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை 12 மையங்களில் நடைபெறும் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 28 Dec 2019 10:15 PM GMT (Updated: 28 Dec 2019 9:49 PM GMT)

மாவட்டத்தில் ஊரக ஊள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்கு எண்ணும் பணி 12 இடங்களில் நடைபெறுகிறது என கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை, 

மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்டமாக நேற்று முன்தினம் சிவகங்கை, காளையார்கோவில், திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி ஆகிய 5 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. 2-வது கட்டமாக நாளை (திங்கட்கிழமை) கல்லல், தேவகோட்டை, கண்ணங்குடி, சாக்கோட்டை, திருப்பத்தூர், சிங்கம்புணரி, எஸ்.புதூர் ஆகிய 7 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த 12 ஒன்றியங்களிலும் உள்ள வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குகள் மாவட்டத்தில் 12 இடங்களில் வருகிற 2-ந்தேதி எண்ணப்படவுள்ளன. சிவகங்கை ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியிலும், காளையார்கோவில் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் சூசையப்பர் பட்டிணம் சகாயராணி பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் எண்ணப்படுகின்றன.

இதேபோல் மானாமதுரை ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் மானாமதுரை ஓ.வி.சி. மேல்நிலைப்பள்ளியிலும், இளையான்குடி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் இளை யான்குடி டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரியிலும் எண்ணப்படவுள்ளன. மேலும் திருப்புவனம் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் திருப்புவனம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியிலும், திருப்பத்தூர் ஒன்றியத்தில் பதிவாகும் வாக்குகள் திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரியிலும் எண்ணப்படுகின்றன. கல்லல் ஒன்றியத்தில் பதிவாகும் வாக்குகள் காரைக்குடி அழகப்பா செட்டியார் பொறியியல் கல்லூரியிலும், தேவகோட்டை ஒன்றியத்தில் பதிவாகும் வாக்குகள் தேவகோட்டை டி.பிரிட்டோ மேல்நிலைப்பள்ளியிலும் எண்ணப்படவுள்ளன. சாக்கோட்டை ஒன்றியத்தில் பதிவாகும் வாக்குகள் காரைக்குடி அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரியிலும், கண்ணங்குடி ஒன்றியத்தில் பதிவாகும் வாக்குகள் தேவகோட்டை என்.எஸ்.எம். வி.பி.எஸ். மேல்நிலைப்பள்ளியிலும் எண்ணப்படவுள்ளன, சிங்கம்புணரி ஒன்றியத்தில் பதிவாகும் வாக்குகள் சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், எஸ்.புதூர் ஒன்றியத்தில் பதிவாகும் வாக்குகள் எஸ்.புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் எண்ணப்படவுள்ளன. முதல் கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பெட்டிகள் அந்தந்த ஒன்றியங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங் களுக்கு கொண்டு செல்லப்பட்டு ஒரு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

Next Story