வாலாஜாபாத் அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி 2 பேர் சாவு


வாலாஜாபாத் அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி 2 பேர் சாவு
x
தினத்தந்தி 29 Dec 2019 10:45 PM GMT (Updated: 29 Dec 2019 8:02 PM GMT)

வாலாஜாபாத் அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

வாலாஜாபாத்,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா கரடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது29). இவர் படப்பை அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். கந்தசாமியின் மனைவியின் தங்கை அர்ச்சனா (21)வும் அங்கு பணிபுரிந்து வந்தார். இவர்கள் இருவரும் சொந்த ஊரான செஞ்சிக்கு சென்றுவிட்டு வேலைக்கு செல்வதற்காக வாலாஜாபாத் வழியாக படப்பைக்கு திருப்பி வந்து கொண்டிருந்தனர்.

வாலாஜாபாத்தை அடுத்த ஒரகடம் நெடுஞ்சாலையில் உள்ள கட்டவாக்கம் கூட்டு சாலை அருகே வந்தபோது வாலாஜாபாத்தில் இருந்து அதே மார்க்கத்தில் வந்து கொண்டிருந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக கந்தசாமியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த கந்தசாமியும், அர்ச்சனாவும் பஸ் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

விபத்தில் பலியான கந்தசாமிக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. கந்தசாமியின் மனைவி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

Next Story