தேர்தல் பணியின் போது குடிபோதையில் இருந்த 2 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம்


தேர்தல் பணியின் போது குடிபோதையில் இருந்த 2 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 29 Dec 2019 10:15 PM GMT (Updated: 29 Dec 2019 10:21 PM GMT)

தேர்தல் பணியின் போது குடிபோதையில் இருந்த 2 போலீஸ்காரர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

மதுரை,

மதுரை மாவட்டத்தில் கடந்த 27-ந்தேதி முதல் கட்டமாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மாவட்ட காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகள், இன்ஸ்பெக்டர்கள், போலீஸ்காரர்கள் என அனைவரும் தேர்தல் பணியின் போது ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும், கண்ணியத்துடனும் பணியாற்ற வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் அறிவுறுத்தி இருந்தார்.

இந்தநிலையில் திருமங்கலம் நகர் போலீஸ் நிலைய ஏட்டு செல்வம், மேலவளவு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட உப்போடைப்பட்டி வாக்குப்பதிவு மையத்திலும், சிலைமான் போலீஸ் நிலைய போலீஸ்காரர் செந்தில் சிவகணேஷ் கொட்டாம்பட்டி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட வி.புதூர் வாக்குப்பதிவு மையத்திலும் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டிருந்தனர்.

பணியிடை நீக்கம்

பணியின் போது அவர்கள் இருவரும் குடிபோதையில் இருந்ததாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து அவர்களுக்கு பதில் வேறு போலீஸ்காரர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.

இதை தொடர்ந்து பணியின் போது குடிபோதையில் இருந்ததாக எழுந்த புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் முடிவில் அது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து தேர்தல் பணியின் போது குடிபோதையில் இருந்த செல்வம், செந்தில் சிவகணேஷ் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் நேற்று உத்தரவு பிறப்பித்தார். வரும் காலங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றால், அதில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.


Next Story