புதுச்சேரி மாநிலத்தில் சரக்கு மற்றும் சேவை வரியில் திருத்தம் செய்ய அவசர சட்டம் - நாளை முதல் அமல்


புதுச்சேரி மாநிலத்தில் சரக்கு மற்றும் சேவை வரியில் திருத்தம் செய்ய அவசர சட்டம் - நாளை முதல் அமல்
x
தினத்தந்தி 30 Dec 2019 10:30 PM GMT (Updated: 30 Dec 2019 9:11 PM GMT)

புதுச்சேரி மாநிலத்தில் சரக்கு மற்றும் சேவை வரியில் திருத்தம் செய்வதற்காக கவர்னர் அவசர சட்டம் பிறப்பித்துள்ளார். இந்த சட்டம் நாளை (புதன்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து கவர்னர் மாளிகை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி, 

இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 239பி உட்பிரிவு (19) மூலம் தமக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின்படி புதுச்சேரியின் நிர்வாகி (கவர்னர்) புதுச்சேரி சரக்கு மற்றும் சேவை (திருத்தம்) அவசர சட்டம் 2019 பிறப்பித்துள்ளார்.

புதுச்சேரியின் சட்டமன்றம் அமர்வில் இல்லாததால் முன்னதாக அமைச்சரவை கூட்டத்தில் இந்த அவசர சட்டம் பிறப்பிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த அவசர சட்டம் பிறப்பிக்க மாநில நிர்வாகிக்கு மத்திய அரசின் ஒப்புதல் மற்றும் ஜனாதிபதியின் அறிவுறுத்தல்கள் பெறப்பட்டுள்ளன.

இந்த அவசர சட்டம் 6 மாத காலத்திற்கு அல்லது புதுச்சேரி சட்டமன்றத்தால் பொருத்தமான மசோதா நிறைவேற்றப்படும் வரை அமலில் இருக்கும்.

கடந்த ஜூன் மாதம் 21-ந் தேதி நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 35-வது கூட்டத்தின் பரிந்துரைப்படி மத்திய அரசு கடந்த ஆகஸ்டு மாதம் முதல் மத்திய ஜி.எஸ்.டி. சட்டத்தில் ஏற்கனவே திருத்தம் செய்துள்ளது.

இந்த அவசர சட்டம் யூனியன் பிரதேசத்தின் ஜி.எஸ்.டி. சட்டத்தில் திருத்தம் செய்வதற்காக நாளை (புதன்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story