தாராவி தொகுதி எம்.எல்.ஏ. வர்ஷா கெய்க்வாட் 2-வது முறையாக மந்திரி ஆனார்


தாராவி தொகுதி எம்.எல்.ஏ. வர்ஷா கெய்க்வாட் 2-வது முறையாக மந்திரி ஆனார்
x
தினத்தந்தி 30 Dec 2019 11:00 PM GMT (Updated: 30 Dec 2019 10:31 PM GMT)

தாராவி தொகுதி எம்.எல்.ஏ. வர்ஷா கெய்க்வாட் 2-வது முறையாக மந்திரியாக பதவி ஏற்றார்.

மும்பை, 

மராட்டியத்தில் தாராவி குட்டி தமிழ்நாடு என அழைக்கப்படுகிறது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் இங்கு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரசை சேர்ந்த வர்ஷா கெய்க்வாட் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் தொடர்ந்து 4-வது முறையாக தாராவி தொகுதியில் வெற்றிபெற்று அவரது பலத்தை நிரூபித்து இருந்தார்.

மேலும் வர்ஷா கெய்க்வாட் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது 2010-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரியாகவும் பதவி வகித்தார்.

எனவே சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலும் அவருக்கு மந்திரி பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதுபோலவே அவர் நேற்று நடந்த மந்திரி சபை விரிவாக்கத்தின் போது, கேபினட் மந்திரியாக பதவி ஏற்று உள்ளார். இது அவரது தொகுதி மக்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில் மந்திரி பதவி ஏற்ற வர்ஷா கெய்க்வாட் கூறுகையில், ‘‘நான் ஏற்கனவே மந்திரியாக பணியாற்றி உள்ளேன். எனவே முந்தைய ஆட்சியில் எனது அனுபவத்தை கருத்தில் கொண்டு எனக்கு இலாகா ஒதுக்கப்படும் என நம்புகிறேன்’’ என்றார்.

வர்ஷா கெய்க்வாட் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரியாக இருந்தவர் என்பதால் அவருக்கு மீண்டும் அதே இலாகா வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2-வது முறை மந்திரியாக பதவி ஏற்றுள்ள வர்ஷா கெய்க்வாட் முன்னாள் எம்.பி. ஏக்நாத் கெய்க்வாட்டின் மகள் ஆவார்.

ஏக்நாத் கெய்க்வாட் தற்போது மும்பை காங்கிரஸ் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story