உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றிய 2 ஆயிரத்து 935 பேருக்கு தபால் வாக்குகள்


உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றிய 2 ஆயிரத்து 935 பேருக்கு தபால் வாக்குகள்
x
தினத்தந்தி 31 Dec 2019 10:30 PM GMT (Updated: 31 Dec 2019 8:52 PM GMT)

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றிய 2 ஆயிரத்து 935 பேர் தபாலில் வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில் தலா 7 ஊராட்சி ஒன்றியங்கள் வீதம் கடந்த 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதற்காக மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்து 156 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. மேலும் தேர்தல் பணியில் இருக்கும் அலுவலர்கள் தபாலில் வாக்களிப்பதற்கு வசதி செய்யப்பட்டது. அதன்படி முதல்கட்ட தேர்தலில் பணியாற்றிய அலுவலர்களில் 1,703 பேருக்கும், 2-வது கட்ட தேர்தலில் பணியாற்றியவர்களில் 1,232 பேருக்கும் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்மூலம் மொத்தம் 2 ஆயிரத்து 935 பேர் தபால் வாக்கு அளிக்க வேண்டும்.

இதற்காக திண்டுக்கல், பழனி, கொடைக்கானல் உள்பட 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் தபால் வாக்குகளுக்கு பெட்டிகள் வைக்கப்பட்டன. இதில் தேர்தல் பணியில் ஈடுபட்டவர்கள், தினமும் தபால் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். அதன்படி இதுவரை 50 சதவீதம் பேர் மட்டுமே தபால் வாக்குகளை செலுத்தி இருப்பதாக தெரிகிறது.

நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணி வரை தொடர்ந்து தபால் வாக்குகள் பெறப்படுகின்றன. அதன்பின்னர் தபால் வாக்குகள் எண்ணிக்கைக்கு எடுத்து செல்லப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

Next Story