20-வது ஆண்டு விழா: 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு தமிழ் அறிஞர்கள் மரியாதை


20-வது ஆண்டு விழா: 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு தமிழ் அறிஞர்கள் மரியாதை
x
தினத்தந்தி 1 Jan 2020 11:00 PM GMT (Updated: 1 Jan 2020 8:44 PM GMT)

கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு தமிழ் அறிஞர்கள் மரியாதை செலுத்தினர்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் உள்ளது. இதன் அருகே மற்றொரு பாறையில் 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி இந்த திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்டது. இத்துடன் சிலை அமைக்கப்பட்டு 20 ஆண்டுகள் ஆகிறது.

தமிழ் அறிஞர்கள் மரியாதை

இந்த ஆண்டு விழாவையொட்டி நேற்று கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையம் சார்பில் குமரி மாவட்ட தமிழ் அறிஞர்கள் கடலின் நடுவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு சென்று அவரது பாதத்தில் மலர்தூவி மரியாதை செய்தனர்.

இதற்காக அனைவரும் தனி படகில் சென்றனர். இந்த நிகழ்ச்சியில் ஆய்வு மைய பொதுச்செயலாளர் பத்மநாபன், செயலாளர் துரை நீலகண்டன், பொருளாளர் சிதம்பர நடராஜன், பா.ஜனதா மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ்பாபு, கவிமணி நற்பணி மன்ற தலைவர் தாமோதரன், பிள்ளையார் நயினார், தமிழ் அறிஞர்கள் முத்துகருப்பன், தமிழ்குழவி, சிவநாராயண பெருமாள், அய்யப்பன் பிள்ளை, மற்றும் அருணாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story