இன்று ஓட்டு எண்ணிக்கை: மாவட்டத்தில் 20 மையங்களில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு


இன்று ஓட்டு எண்ணிக்கை: மாவட்டத்தில் 20 மையங்களில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
x
தினத்தந்தி 1 Jan 2020 11:00 PM GMT (Updated: 1 Jan 2020 10:19 PM GMT)

உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று நடைபெறுவதையொட்டி மாவட்டத்தில் 20 மையங்களில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 2 கட்டமாக கடந்த 27 மற்றும் 30-ந் தேதிகளில் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 81.51 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இதையடுத்து வாக்குப்பெட்டிகள் அனைத்தும் ‘சீல்’ வைக்கப்பட்டு மாவட்டத்தில் 20 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.

அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

ஓட்டு எண்ணிக்கை

இந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கை இன்று(வியாழக்கிழமை) காலை நடக்கிறது. இதையொட்டி ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையங்களிலும் பாதுகாப்பிற்காக தடுப்புக்கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மையங்களில் ஓட்டுகள் எண்ணுவதற்கு வசதியாக மேஜைகள் போடப்பட்டுள்ளன.

இது குறித்து கலெக்டர் ராமன் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் 2 கட்டமாக பதிவான வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குப்பெட்டிகள் அனைத்தும் நாளை(இன்று) காலை 8 மணிக்கு கட்சி வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் திறந்து ஓட்டுகள் எண்ணப்படும்.

போலீஸ் பாதுகாப்பு

முதல்சுற்று ஓட்டு விவரம் வெளியிட காலை 10.30 மணிக்கு மேல் ஆகிவிடும். முன்னிலை விவரங்கள் ஒலிபெருக்கி மூலம் உடனுக்குடன் தெரிவிக்கப்படும். வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடக்கும். இதில் யாரும் அச்சப்பட தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

ஓட்டு எண்ணிக்கையையொட்டி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் தலைமையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆலோசனை

இதற்கிடையில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் ராமன் தலைமையில் நடந்தது. இதில் அலுவலர்களுக்கு சில அறிவுரைகளை கலெக்டர் வழங்கினார்.

Next Story