புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலதாமதமாக தொடங்கியது


புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலதாமதமாக தொடங்கியது
x
தினத்தந்தி 2 Jan 2020 11:00 PM GMT (Updated: 2 Jan 2020 5:30 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 14 வாக்கு எண்ணும் மையத்திலும் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலதாமதமாக தொடங்கியது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல், கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, குன்றாண்டார்கோவில், புதுக்கோட்டை, விராலிமலை ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கு முதல் கட்டமாக கடந்த 27-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து அறந்தாங்கி, அரிமளம், ஆவுடையார்கோவில், மணமேல்குடி, பொன்னமராவதி, திருமயம், திருவரங்குளம் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு கடந்த 30-ந் தேதி 2-ம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் 10 லட்சத்து 59 ஆயிரத்து 250 பேர் வாக்களிக்க இருந்தனர். இதில் 2 கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவில் மொத்தம் 8 லட்சத்து 24 ஆயிரத்து 124 பேர் வாக்களித்து இருந்தனர். இது 77.80 சதவீதம் ஆகும்.

போலீஸ் பாதுகாப்பு

ஒவ்வொரு ஒன்றியங்களிலும் பதிவான வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு, அந்தந்த ஒன்றியங்களில் அமைக்கப்பட்டு உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

பின்னர் அங்குள்ள ஒரு அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து அந்த அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் 32 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த வாக்கு எண்ணும் மையங்களை அவ்வப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் நேரில் பார்வையிட்டு, அங்கு பாதுகாப்பு பணியில் உள்ள போலீசாருக்கு ஆலோசனைகளை வழங்கி வந்தார். மேலும் ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் தீயணைப்பு வாகனம் மற்றும் 108 ஆம்புலன்ஸ் வாகனம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

காலதாமதமாக தொடங்கியது

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைக்கப்பட்டு இருந்த புதுக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லூரி உள்பட 14 வாக்கு எண்ணும் மையத்திலும் அங்கு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த வாக்குப்பெட்டிகள் உடைக்கப்பட்டு, காலையில் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. பெரும்பாலான வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை காலதாமதமாக தொடங்கியது. குறிப்பாக புதுக்கோட்டையில் வாக்கு எண்ணும் பணிக்கு அலுவலர்களை நியமிப்பதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக வாக்கு எண்ணும் பணி தாமதமாக தொடங்கியது.

முதலில் தபால் ஓட்டு எண்ணப்பட்டது. தொடர்ந்து வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டு இருந்த அலுவலர்கள் ஒவ்வொரு வாக்குப்பெட்டிகளில் இருந்த வாக்குகளை ஊராட்சி மன்ற தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான வாக்குகளை தனித்தனியாக பிரித்து எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து மாற்றம்

வாக்கு எண்ணும் பணி தொடங்கியதை அடுத்து வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்து வாக்கு எண்ணும் மையத்திற்குள் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் தீப்பெட்டி, மை ஊற்றும் பேனா, செல்போன், இங்க்பாட்டில் மற்றும் வாட்டர் பாட்டில் போன்ற பொருட்களை எடுத்து செல்ல அனுமதிக்கவில்லை. வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்களை போலீசார் சோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர்.

வாக்கு எண்ணும் பணி தொடங்கியவுடன் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தின் முன்பு வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் திரண்டு நின்றதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. புதுக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லூரி முன்பு உள்ள சாலையில் அதிக அளவில் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் திரண்டதால், போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டு இருந்தது.

போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

புதுக்கோட்டையில் உள்ள அரசு மகளிர் கலை கல்லூரி, பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ள போலீசாருக்கு எவ்வாறு பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கினார். இதேபோல மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

Next Story