சோழவரத்தில் வாக்கு எண்ணும் மையம் முன்பு திரண்டவர்களை கலைக்க போலீசார் தடியடி


சோழவரத்தில் வாக்கு எண்ணும் மையம் முன்பு திரண்டவர்களை கலைக்க போலீசார் தடியடி
x
தினத்தந்தி 2 Jan 2020 10:45 PM GMT (Updated: 2 Jan 2020 6:05 PM GMT)

சோழவரத்தில் வாக்கு எண்ணும் மையம் முன்பு திரண்டவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.

மீஞ்சூர்,

சோழவரம் ஒன்றியத்தில் கடந்த 30-ந்தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 549 வாக்காளர்கள் உள்ள நிலையில் 228 வாக்குச்சாவடி மையங்களில் 99 ஆயிரத்து 132 பேர் வாக்களித்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை வாக்கு எண்ணிக்கை 8 மணி அளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்ததையடுத்து 361 பதவிக்கான தேர்தலில் வேட்பாளர்கள் முகவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஆகியோர் வாக்கு எண்ணும் மையமான சோழவரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி முன்பு திரண்டனர்.

ஏராளமானோர் அங்கு திரண்டதால் வேட்பாளர்களின் முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு உள்ளே செல்ல முடியாமல் தவித்தனர். கூட்டத்தை கலைக்க போலீசார் முயற்சி மேற்கொண்டனர். இருப்பினும் யாரும் கலைந்து செல்ல வில்லை. இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

வாக்கு எண்ணிக்கை கால தாமதமாக தொடங்கிய நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கு ஒலிபெருக்கி மூலம் வேட்பாளர்கள் மற்றும் முகவர்களை அழைத்து அடையாள அட்டை காண்பித்த பின்னரே அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

Next Story