உள்ளாட்சி தேர்தல்: குமரியில் 9 இடங்களில் வாக்கு எண்ணிக்கை


உள்ளாட்சி தேர்தல்: குமரியில் 9 இடங்களில் வாக்கு எண்ணிக்கை
x
தினத்தந்தி 2 Jan 2020 11:15 PM GMT (Updated: 2 Jan 2020 8:26 PM GMT)

குமரி மாவட்டத்தில் 9 இடங்களில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடந்தது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடந்தது. இதைத் தொடர்ந்து வாக்கு பெட்டிகள் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டன.

இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை குமரி மாவட்டத்தில் 9 இடங்களில் நேற்று நடந்தது. அதாவது காமராஜ் பாலிடெக்னிக் கல்லூரி, புன்கரை நூருல் இஸ்லாம் பாலிடெக்னிக் கல்லூரி, திருத்துவபுரம் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி, வெள்ளிச்சந்தை மணவிளை அருணாச்சலா பெண்கள் பொறியியல் கல்லூரி, ஏற்றக்கோடு அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி, கொட்டாரம் அரசுமேல்நிலைப்பள்ளி, பூதப்பாண்டியில் உள்ள சர் சி.பி. மெமோரியல் அரசு மேல்நிலைப்பள்ளி, தொலையாவட்டத்தில் உள்ள புனித ஜுட்ஸ் பாலிடெக்னிக் கல்லூரி, வாவறையில் உள்ள புனித பிரான்ஸ்சிஸ் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடந்தது.

தனித்தனி இடம்

ஒவ்வொரு மையத்திலும் காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. சில மையங்களில் முகவர்களுக்கு இருக்கை வசதியும் செய்யப்பட்டு இருந்தது. சுற்றிலும் இரும்பு வலையால் தடுப்புவேலி அமைக்கப்பட்ட இடத்தில் வாக்கு எண்ணும் பணியாளர்கள் அமர்ந்து வாக்குகளை எண்ணினார்கள்.

பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டு இருந்த வாக்கு பெட்டிகளை ஒவ்வொன்றாக எடுத்து வந்து எண்ணினார்கள். வாக்கு எண்ணும் மையத்தில் பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள் பதவிகளுக்கான வாக்குகள் தனித்தனி இடத்தில் எண்ணப்பட்டன. இதே போல ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கையும் வேறு வேறு இடத்தில் நடந்தது. அதாவது ஒரே மையத்தில் 4 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடந்தது.

மேல்புறம் ஒன்றியம்

ஆனால் மேல்புறம் ஒன்றியத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்பட்டதால் அனைத்து பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கையும் ஒரே இடத்தில் நடந்தது. வாக்குகள் பதிவாகி இருந்த கட்டுப்பாட்டு எந்திரத்தை அதிகாரிகள் ஒவ்வொன்றாக கொண்டு வந்து எண்ணினார்கள்.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பல சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடந்தது. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவிலும் வெற்றி பெற்றவர்களின் விவரம் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் அவர்கள் பெற்ற வாக்குகளின் விவரம் அறிவிப்பு பலகையில் எழுதப்பட்டது. ஒவ்வொரு சுற்று முடிவடைந்ததும், வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் அதில் எழுதப்பட்டன.

வாக்குச்சீட்டுகள் மூலமாக பதிவான வாக்குகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலமாக பதிவான வாக்குகள் அனைத்துமே தேர்தல் முகவர்கள் முன்னிலையிலேயே எண்ணப்பட்டன. ஒவ்வொரு சுற்று முடிந்ததும் தேர்தல் முகவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். அதாவது ஒரு சுற்றிலேயே ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களின் வெற்றி தோல்வி தெரிந்துவிட்டது. எனவே வெற்றி மற்றும் தோல்வி அடைந்த வேட்பாளர்களின் முகவர்கள் வெளியேற்றப்பட்டனர். வெளியே சென்ற முகவர்கள் வாக்கு எண்ணும் மையம் முன் தங்களது வெற்றியை கொண்டாடினார்கள்.

இதைத் தொடர்ந்து அடுத்த சுற்றுக்கு வேட்பாளர்களின் முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டார்கள். ஒவ்வொரு முகவர்களையும் பலத்த சோதனைக்கு பிறகே வாக்கு எண்ணும் மையத்துக்குள் போலீசார் அனுமதித்தனர். செல்போன், கேமரா உள்ளிட்டவை கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

போலீஸ் குவிப்பு

வாக்கு எண்ணிக்கையையொட்டி அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். அனைத்து மையங்களும் போலீசாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு இருந்தது. நுழைவு வாயிலில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள். வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படவில்லை.

வாக்கு எண்ணிக்கையானது மேல்புறம் ஒன்றியத்தில் மட்டும் எதிர்பார்த்தபடி மாலையில் முடிவுபெற்றது. மற்ற இடங்களில் வாக்கு எண்ணிக்கையானது எதிர்பார்த்தபடி முடிவடையவில்லை. இரவிலும் வாக்கு எண்ணிக்கை நடந்தது.

தோ்தல் பார்வையாளர் ஆய்வு

ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்துக்கும் மாவட்ட தேர்தல் பார்வையாளர் நாகராஜன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அவருடன் கலெக்டர் பிரசாந்த் வடநேரேவும் சென்று பணிகளை பார்வையிட்டார். மேலும் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் ரோந்து சென்று பாதுகாப்பு பணிகளை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் ஆய்வு நடத்தினார். மொத்தத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையையொட்டி ஊரக பகுதிகள் பரபரப்பாக காணப்பட்டன.


Next Story