வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு 6-ந் தேதி நடக்கிறது


வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு 6-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 2 Jan 2020 10:30 PM GMT (Updated: 2 Jan 2020 8:38 PM GMT)

குமரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வருகிற 6-ந்தேதி நடக்கிறது.

சுசீந்திரம்,

வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த ஆண்டு வருகிற 6-ந் தேதி வைகுண்ட ஏகாதசி ஆகும். அன்றைய தினம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவில், பறக்கை மதுசூதனப்பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி காலையில் சிறப்பு வழிபாடு, சாமி பவனி போன்றவை நடைபெறுகிறது.

இதுபோல், வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவில், சுசீந்திரம் துவாரகை கிருஷ்ணன்கோவில், ஏழகரம் பெருமாள் கோவில், நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் அதிகாலையில் அபிஷேகங்கள் நடைபெறும். அதைத்தொடர்ந்து சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்.

ஏற்பாடு

இந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் திரளான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் கோவில் பணியாளர்களும், பக்தர்களும் இணைந்து செய்து வருகிறார்கள்.

Next Story