வேப்பூரில், மின்சாரம் தாக்கி வாலிபர் பலி


வேப்பூரில், மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
x
தினத்தந்தி 3 Jan 2020 10:00 PM GMT (Updated: 3 Jan 2020 7:47 PM GMT)

வேப்பூரில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்.

வேப்பூர்,

வேப்பூர் அருகே உள்ள வரம்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி சுமதி. இவர்களுடைய மகன் யுவராஜ் (வயது 17). சேகரும், சுமதியும் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகின்றனர். இதனால் யுவராஜ் வரம்பனூரில் உள்ள தனது பெரியப்பா வீட்டில் தங்கியிருந்து, வேப்பூர் தாலுகா அலுவலகம் அருகில் உள்ள இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று காலை யுவராஜ் வழக்கம் போல் வேலைக்கு சென்றார். இந்த நிலையில் மதியம் அவர் அங்கிருந்த மின்மோட்டாரை இயக்கி, தண்ணீரை பீய்ச்சி அடித்து இருசக்கர வாகனத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவரை சக தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே யுவராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த வேப்பூர் போலீசார், யுவராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story