ஓடும் ரெயிலில் இருந்து விழுந்து தண்டவாளத்தில் படுகாயத்துடன் கிடந்த வாலிபர் - மோட்டார் மேன் உதவியால் உயிர் பிழைத்தார்


ஓடும் ரெயிலில் இருந்து விழுந்து தண்டவாளத்தில் படுகாயத்துடன் கிடந்த வாலிபர் - மோட்டார் மேன் உதவியால் உயிர் பிழைத்தார்
x
தினத்தந்தி 3 Jan 2020 11:05 PM GMT (Updated: 3 Jan 2020 11:05 PM GMT)

தாக்குர்லி அருகே ஓடும் ரெயிலில் இருந்து தண்டவாளத்தில் விழுந்து படுகாயம் அடைந்த வாலிபர் மோட்டார் மேன் உதவியால் உயிர் பிழைத்தார்.

மும்பை,

மும்பை காந்திவிலி ரெயில் நிலையத்தில் இருந்து கார்த்திக் சிங் (வயது28) என்பவர் தனது நண்பர்களுடன் மும்பை சி.எஸ்.எம்.டி. செல்லும் ரெயிலில் ஏறி வந்தார். கல்யாண் ரெயில் நிலையம் கடந்து ரெயில் வந்தபோது, வாசற்படியில் நின்றிருந்த கார்த்திக் சிங் கைப்பிடி நழுவி ஓடும் ரெயிலில் இருந்து கீழே விழுந்தார். இதனால் அவருடன் இருந்த நண்பர்கள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். இருப்பினும் அந்த ரெயில் டோம்பிவிலி ரெயில் நிலையத்தில் வந்து நின்றது.

இது தொடர்பாக ரெயில்வே மேலாளரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின்பேரில் ரெயில்வே போலீசார் தண்டவாளத்தில் விழுந்த கார்த்திக் சிங்கை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது இரவு நேரம் என்பதால் அவரை கண்டுபிடிக்க முடியாமல் போனது. இந்தநிலையில் தானேயில் இருந்து கல்யாண் நோக்கி சென்ற மின்சார ரெயில் தாக்குர்லி ரெயில் நிலையம் அருகே வந்தபோது, தண்டவாளத்தின் ஓரம் படுகாயங்களுடன் கிடந்த கார்த்திக் சிங்கை ரெயிலை இயக்கி வந்த மோட்டார் மேன் ராம்வர்மா கண்டார். உடனடியாக அவர் ரெயிலை நிறுத்தி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீசாருடன் சேர்ந்து அந்த நபரை மீட்டு தான் இயக்கி வந்த ரெயிலில் ஏற்றி அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தண்டவாளம் அருகே விழுந்து கிடந்த கார்த்திக் சிங்கை மீட்ட மோட்டார் மேன் ராம்வர்மாவிற்கு ரெயில்வே உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

Next Story