மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் புத்தர் சிலை அகற்றம்: கூலித்தொகையை வழங்காததால் உரிமையாளர் தூக்கி சென்றார்


மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் புத்தர் சிலை அகற்றம்: கூலித்தொகையை வழங்காததால் உரிமையாளர் தூக்கி சென்றார்
x
தினத்தந்தி 4 Jan 2020 11:00 PM GMT (Updated: 4 Jan 2020 5:25 PM GMT)

மோடி-ஜின்பிங் இருநாட்டு தலைவர்களின் வருகையையொட்டி, மாமல்லபுரம் கடற்கரை கோவில் நுழைவுவாயிலில் புத்தர் சிலை அமைக்கப்பட்டது. சிலைக்கான கூலித் தொகையை பேரூராட்சி நிர்வாகம் வழங்காததால் சிற்ப உரிமையாளர் அதிரடியாக அந்த சிலையை அங்கிருந்து தூக்கிச் சென்றார்.

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்திற்கு கடந்த அக்டோபர் மாதம் 10-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் வருகை தந்தனர். அப்போது, இரு நாட்டு தலைவர்களும் அங்குள்ள புராதன சின்னங்கங்களை கண்டு ரசித்து புகைப்படங்களும் எடுத்து கொண்டனர். இந்த நிலையில் அவர்களின் வருகையையொட்டி, மாமல்லபுரம் கடற்கரை கோவில் நுழைவு வாயிலில் சீன அதிபரை கவரும் வகையில் சீனர்களின் பவுத்த மத வழிபாட்டு கடவுளான புத்தர் சிலையானது இருயானை சிற்பங்களுடன்அமைக்கப்பட்டது.

இதற்காக மாமல்லபுரத்தில் உள்ள மயன் சிற்பக்கலைக்கூடத்தில் இருந்து ரூ.8 லட்சம் மதிப்புடைய 10 அடி உயரமுடைய புத்தர் சிலையும், திருவள்ளுவர் சிற்பக்கலைக்கூடத்தில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புகொண்ட 7 அடி உயரமுடைய இருயானை சிற்பங்களும் வாங்கப்பட்டது. இந்த சிலையை கடற்கரை கோவில் முகப்பு வாயிலில் நிரந்தரமாக வைக்க காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் பேரூராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டு அமைக்கப்பட்டது.

இந்த 3 சிற்பங்களுக்கான செலவு மற்றும் கூலித்தொகையினை பேரூராட்சி நிர்வாகம் சார்பில், சம்மந்தப்பட்ட சிற்பக்கலைக்கூட சிலை உரிமையாளருக்கு செலுத்த உத்தரவாதம் அளிக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால், இரு நாட்டு தலைவர்கள் வந்து சென்று 3 மாதங்கள் ஆகியும், சிலைக்கான செலவு தொகையை முழுமையாகவோ, வாடகை கட்டணமாகவோ பேரூராட்சி நிர்வாகம் செலுத்தவில்லை என தெரிகிறது.

சிலை உரிமையாளர் பல முறை பேரூராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோதும், சிலைக்கான முழு தொகையினை வழங்காமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது. மேலும் சிலைகளுக்கு அருகில் வைக்கப்பட்ட பூச்செடிகளும் பராமரிப்பு இல்லாமல் சிலநாட்களில் கருகிவிட்டது.

ஆனால் இங்கு சுற்றுலா வரும் பயணிகள் பலர் இந்த புத்தர் மற்றும் யானை சிலைகளுக்கு அருகில் நின்று செல்பி, புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வந்தனர். இந்தநிலையில் புத்தர் மற்றும் யானை சிலைகளுக்கு முன்பணமாக கூட எந்தவித தொகையையும் பேரூராட்சி நிர்வாகம் வழங்காததால் விரக்தியடைந்த சிலை உரிமையாளர் முன்அறிவிப்பின்றி அந்த சிலையை அங்கிருந்து சிற்பக்கலைக்கூடத்திற்கு தூக்கிச் சென்றுவிட்டார்.

அதேபோல் ஐந்துரதம் பகுதியில் புல்வெளிகளில் அமைக்கப்பட்ட புத்தர், யானை, புலி உள்ளிட்ட சிலைகளுக்கும் பேசியபடி கூலித்தொகை கொடுக்காததால் அங்கிருந்த சிலைகளையும் சிலை உரிமையாளர் எடுத்து சென்றுவிட்டார். இதையடுத்து, நேற்று சுற்றுலா வந்த ஏராளமான பயணிகள் கடற்கரை கோவிலின் முகப்பு வாயிலில் இருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டதை கண்டு ஏமாற்றமடைந்து விரக்தியுடன் திரும்பினர். தற்போது கடற் கரை கோவிலின் முகப்பு வாயிலில் உள்ள இரு யானை சிலைகளையும் இன்னும் சில தினங்களில் அதன் உரிமையாளர் எடுத்து செல்ல முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

இரு நாட்டு தலைவர்களின் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பை நியாபகப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட சிலைகள் அகற்றப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story