வைகுண்ட ஏகாதசி விழா: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு


வைகுண்ட ஏகாதசி விழா: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு
x
தினத்தந்தி 4 Jan 2020 10:45 PM GMT (Updated: 4 Jan 2020 5:30 PM GMT)

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை (திங்கட்கிழமை) சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம்,

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பூலோக வைகுண்டமாகவும், 108 வைணவ தலங்களில் முதன்மையானதாகவும் உள்ளது. இக்கோவிலில் நடக்கும் வைகுண்ட ஏகாதசி விழாவில் பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு ஸ்ரீரங்கம் கோவிலில் நடக்கும் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த மாதம் 26-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.

இதையடுத்து கடந்த 27-ந் தேதி பகல் பத்து நாள் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் தினமும் காலை நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை அளித்து வருகிறார்.

சொர்க்கவாசல் திறப்பு

விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. நாளை அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் ரத்தின அங்கி அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படுகிறார். அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டதும், அதனை நம்பெருமாள் கடக்கிறார். அதன்பின் மணல்வெளியில் பக்தர்களுக்கு காட்சியளித்து விட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு பக்தர்களுக்கு சேவை அளிப்பார்.

சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவும், தரிசனம் செய்யவும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வருகை தருவது உண்டு. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரமாண்ட திரை

கோவிலுக்குள் பக்தர்கள் வரிசையாக செல்ல தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அம்மா மண்டபம், ராஜ கோபுரம் முன்பு மற்றும் சித்திரை வீதிகள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் தொலைநோக்கி கருவி மூலம் பக்தர்களின் கூட்டத்தை கண்காணிக்க உள்ளனர். குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் ஆங்காங்கே பொருத்தப்பட்டு, அதில் பதிவாகும் காட்சிகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை பக்தர்கள் கண்டு களிக்கும் வகையில் ராஜ கோபுரம் முன்பு மற்றும் அம்மா மண்டபம், சித்திரை வீதியில் பெரிய எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு கார், வேன், பஸ்களில் வருபவர்கள் வாகனங்களை நிறுத்த இட வசதி தனியாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விழாவையொட்டி ஸ்ரீரங்கம் கோவில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரங்கால் மண்டபத்தில் அலங்கார தோரணங்கள் கட்டப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வேன்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. மருத்துவ குழுக்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கொரிய நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு நேற்று வந்திருந்தனர். அவர்கள், கோவிலின் பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்த்து, கோவிலின் பெருமை குறித்து கேட்டறிந்தனர்.

விழாக்கோலம்

ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பையொட்டி ஸ்ரீரங்கம் விழாக்கோலம் பூண்டுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வேணு சீனிவாசன், இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்துள்ளனர்.

Next Story